சிட்னி: இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் அம்ரித்பால் சிங், புதிய உச்சத்தை தொட்டுள்ளார். ஆஸ்திரேலியாவின் தேசிய கூடைப்பந்து லீக் போட்டிகளில், சிட்னி கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட உள்ள முதல் இந்தியர் அம்ரித்பால் சிங்.
அமெரிக்காவில் என்.பி.ஏ., கூடைப்பந்து லீக் போட்டிகள் மிகவும் பிரபலம். அதுபோல, ஆஸ்திரேலியாவில் என்.பி.எல்., எனப்படும் தேசிய கூடைப்பந்து லீக் போட்டிகள் பிரபலம். இந்த போட்டிகளில் பங்கேற்கும் சிட்னி கிங்ஸ் அணிக்காக, இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் அம்ரித்பால் சிங் விளையாட உள்ளதாக, அந்த அணி அறிவித்துள்ளது.
26 வயதாகும், 7 அடி உயர அம்ரித்பால், 19 வயது முதல் விளையாடி வருகிறார். பஞ்சாபை சேர்ந்த இந்த உயர்ந்த மனிதரை, சமீபத்தில் சீனாவில் நடந்த அட்லஸ் சாலஞ்ச் போட்டியில் தங்கள் அணிக்காக விளையாட வரும்படி, சிட்னி கிங்ஸ் அணி அழைத்திருந்தது.
முன்னதாக, இந்திய கூடைப்பந்து அணிக்காக விளையாடும் அம்ஜோத் சிங், யத்விந்தர் சிங், விசேஷ் பிருகுவன்சி ஆகியோருடன், அம்ரித்பால், சிட்னி கிங்ஸ் அணியை தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்று போட்டிகளில் பங்கேற்றார்.
அதில் சிறப்பாக விளையாடியதால், அட்லஸ் சாலஞ்ச் போட்டியில் சிட்னி கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த போட்டியில், 17 புள்ளிகளை எடுத்ததுடன், 16 ரிபவுண்ட்களையும் எடுத்து அசத்தினார்.
அதைத் தொடர்ந்து, என்.பி.எல்., போட்டிக்கான சிட்னி கிங்ஸ் அணிக்கு தேர்வாகியுள்ளார். வரும் அக்டோபர் மாதம் முதல் என்.பி.எல்., போட்டிகள் நடக்க உள்ளன.
என்.பி.எல்., போட்டிகளில், என்.பி.ஏ., அணியான உதா ஜாஸ் அணி உள்ளிட்ட பிரபல கூடைப்பந்து அணிகள் பங்கேற்க உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்காக தேர்வாகியுள்ளது அம்ரித்பால் சிங்கின் விளையாட்டு வாழ்க்கையில் மிக முக்கியமான கட்டமாக அமைய உள்ளது.