கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் துப்பாக்கிச் சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஹீனா சிந்து தங்கம் வென்றார். இதன் மூலம் இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 11வது தங்கம் கிடைத்துள்ளது. மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் ஹீனா ஏற்கனவே வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் துப்பாக்கிச் சுடுதலில் ஒரே காமன்வெல்த் போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனையானார்.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றது. வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா உள்பட 71 நாடுகளைச் சேர்ந்த 6,700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் நாளில், மகளிர் பளுதூக்குதலில் மீராபாய் சானு தங்கம், குருராஜா வெள்ளி வென்றனர். இரண்டாவது நாளில், பளு தூக்குதலில் சஞ்சிதா சானு புதிய சாதனையுடன் தங்கம், 18 வயதாகும் தீபக் லேதர் வெண்கலம் வென்றனர். மூன்றாவது நாளில் பளுதூக்குதலில் வேலூரைச் சேர்ந்த சதீஷ் சிவலிங்கம் தங்கம், ரகலா வெங்கட் ராகுல் தங்கம் வென்று அசத்தினார். மூன்று நாட்களில் நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என, மொத்தம் 6 பதக்கங்கள் கிடைத்தன.
நான்காவது நாளில் மகளிர் பளு தூக்குதலில் பூனம் யாதவ் தங்கம், துப்பாக்கி சுடுதலில் 11-ம் வகுப்பு மாணவி மனு பாக்கர் தங்கமும், ஹீனா சித்து வெள்ளியும், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள்ஸ் பிரிவில் ரவிக்குமார் வெண்கலமும் வென்றனர். பளுதூக்குதலில் விகாஸ் தாகுர் வெண்கலம் வென்றார். அதைத் தொடர்ந்து மகளிர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது.
ஐந்தாவது நாளான நேற்று ஆடவருக்கான 105 கிலோ பளுதூக்குதல் பிரிவில் பிரதீப்சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் ஜித்து ராய் தங்கப் பதக்கத்தையும், ஓம் மிதர்வால் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பின்னர் ஆடவர் டேபிள் டென்னிஸ் அணி தங்கம் வென்றது. பாட்மின்டனில் இந்திய அணி தங்கம் வென்றது. அதையடுத்து இந்தியாவுக்கு 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என, 19 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் போட்டியின் ஆறாவது நாளான இன்று, மகளிர் துப்பாக்கி சுடுதலில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் ஹீனா சிந்து தங்கம் வென்று அசத்தினார். இது இந்தியாவுக்கு கிடைத்துள்ள 11வது தங்கமாகும். நேற்று முன்தினம் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹீனா வெள்ளி வென்றிருந்தார். இதன் மூலம் ஒரே காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனையானார். இந்தப் பிரிவில் பங்கேற்ற அனு சிங், 6வது இடத்தைப் பிடித்தார்.
அதே நேரத்தில் காமன்வெல்த் போட்டிகளில் 8 பதக்கங்கள் வென்றுள்ள அனுபவ வீராரான ககன் நாரங்க், ஆடவர் 50 மீட்டர் பிரிவில் 7வது இடத்தையே பிடித்தார். மற்றொரு அனுபவ வீரர் செயின் சிங் 4வது இடத்தைப் பிடித்தார்.