கொரோனாவால் தள்ளிப் போன ஒலிம்பிக்
கொரோனாவைரஸ் தாக்கம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டு விட்டன. இதனால் அடுத்த ஆண்டு ஜூலை 23ம் தேதி போட்டிகள் தொடங்கும். இதையடுத்து வீரர்களும், வீராங்கனைகளும் இதற்கேற்ற வகையில் தயாராக ஆரம்பித்துள்ளனர். பலருக்கு இது ஏமாற்றம்தான். ஆனால் கொரோனாவை வைத்துக் கொண்டு போட்டியை நடத்த முடியாது என்பதை அவர்களும் உணர்ந்துள்ளனர்.
நிறைய திட்டம் போட்டேன்
இந்த நிலையில்தான் ஜெய்ப்பூரில் உள்ள அபூர்வி இந்தப் போட்டி ஒத்திவைப்பு குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளா். அதில் அவர் கூறுகையில், நான் ஒலிம்பிக் போட்டிக்காக நிறைய திட்டமிட்டு வைத்திருந்தேன். போட்டிக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது வரை யோசித்து வைத்திருந்தேன். ஆனால் தற்போது பிரேக் கிடைத்துள்ளது. இன்னும் ஒன்றரை வருடம் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தகுதிப் போட்டி வச்சுராதீங்க
இப்போது குழப்பமான சூழலே நிலவுகிறது. லாக்டவுன் பீரியடில் இருக்கிறோம். எந்தப் போட்டி எப்போது நடக்கும் என்பது தெரியவில்லை. இந்த தள்ளிவைப்பால் ஏமாற்றமடைந்தாலும் கூட மீண்டும் தகுதிப் போட்டியில் கலந்து கொள்ளத் தேவையில்லை என்பது நிம்மதி அளிக்கிறது. இது பெரிய நிவாரணம்தான். காரணம் அனைவருமே போட்டிக்காக கடுமையான பயிற்சி எடுத்து தயாராகி உள்ளோம். எனவே மறுபடியும் தகுதிப் போட்டி வைத்தால் பெரும் சிரமமாகி விடும் என்றும் அபூர்வி கூறியுள்ளார்.
இது சரியான முடிவுதான்
போட்டிகளை தள்ளி வைத்திருப்பது சரியான முடிவுதான். ஏமாற்றமாக இருந்தாலும் கூட வேறு வழியில்லை. இந்த முடிவு சரியானதே. சில மாதங்களுக்கு முன்பு வரை இப்படிப்பட்ட சூழ்நிலை வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் இப்போது மொத்தமாக மாறியுள்ளது. மக்களின் உயிரும், எங்களின் நலனும் முக்கியம் என்பதை ஐஓசி கருத்தில் கொண்டுள்ளது. அந்த வகையில் இது நல்ல முடிவுதான் என்று தெரிவித்துள்ளார் அபூர்வி.
இதை சாதகமாக எடுத்துக் கொள்கிறேன்
இதை நான் சாதகமாகவே எடுத்துக் கொள்கிறேன். எனது இலக்கு அப்படியேதான் இருக்கிறது. நிச்சயம் எனது அணியினருடன் மீண்டும் தீவிர பயிற்சியில் இறங்குவேன். பதக்கம் வெல்வதே எங்களது இலக்காகும் என்றார் அபூர்வி. அபூர்வி காமன்வெல்த் போட்டிகளில் பலமுறை பதக்கம் வென்றவர் ஆவார். 27 வயதான அபூர்வி, முன்னாள் சாம்பியன் ராகேஷ் மன்பத்திடம் பயிற்சி பெற்று வருகிறார். தற்போது கிடைத்துள்ள பிரேக்கை பிட்னஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படத் திட்டமிட்டுள்ளாராம் அபூர்வி.