சென்னை: 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடி பில்டிங் துறையில் அர்ஜுனா விருது வென்ற தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.
இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு அர்ஜுனா விருது உள்ளிட்ட பல விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது. ஆனால் இதில் பல துறைகளுக்கு கடந்த சில வருடங்களாக விருது வழங்கப்படவே இல்லை. முக்கியமாக பாடி பில்டிங் துறைக்கு 20 வருடமாக விருது வழங்கப்படவே இல்லை.
அதன்படி சரியாக 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாடி பில்டிங் துறையில் தமிழகத்தை சேர்ந்த பாஸ்கரன் இந்த வருடம் அர்ஜுனா விருது வென்றார். சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த இவரை நேரில் சந்தித்து ஒன் இந்தியா சார்பாக பேட்டி கண்டோம்.
தன்னுடைய வாழ்க்கை பாதை குறித்து அவர் உருக்கமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில், நான் 20 வருடமாக ஐசிஎப்பில் பணியாற்றுகிறேன். எல்லா இளைஞர்களையும் போல உடலை ஏற்ற வேண்டும் என்று 1997ல் ஜிம்மில் சேர்ந்தேன். உயரம் குறைவாக இருப்பதால் வேகமாக உடல் ஏறியது.
இதனால் என்னுடைய மாஸ்டர் ராஜேந்திரன், நீ பாடி பில்டர் போல இருக்கிறாய் என்று கூறி என்னை ஊக்கப்படுத்தினார். இதனால் அதை நோக்கி நான் நகர தொடங்கினேன். நான் அப்போது 5 அடி இருந்தேன். இது எனக்கு சாதகமாக இருந்தது. எனக்கு இந்த விருது வாங்கியது பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. 20 வருட உழைப்பிற்கு கிடைத்த மரியாதை இது.
பல மக்கள் போகிற இடத்தில் எல்லாம் என்னை புகழ்கிறார்கள். பல மக்கள் என்னை ஊக்குவிக்கிறார்கள். தமிழக மக்கள் என்னை கொண்டாடுகிறார்கள். நான் தேசிய, ஆசியா, மற்றும் உலக அரங்கில் 2018ல் தங்க பதக்கம் வென்றேன். அதேபோல் 2003லேயே தெற்காசியாவில் தங்க பதக்கம் வென்றுள்ளேன்.
இதை எல்லாம் மரியாதை செய்யும் விதமாக அவர்கள் விருது வழங்கி இருக்கிறார்கள். எங்களின் பெடரேஷனில் இருந்து விருதுக்கு விண்ணப்பிக்க சொன்னார்கள். அவர்கள் சொன்னபடி செய்தேன். அதேபோல் தற்போது அர்ஜுனா விருது கிடைத்துள்ளது.
ரயில்வே மற்றும் இந்திய பாடிபில்டிங் பெடரேஷன்தான் என்னை ஊக்குவித்தார்கள். அதிலும் ரயில்வேயில் அர்ஜுனா பெற்ற முதல் நபர் நபர் நான்தான். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எனக்கு கடிதம் அளித்தார். நேரடியாகவும் வாழ்த்து தெரிவித்தார்.
நாங்கள் பாடி பில்டிங் அகாடமி நடத்தி வருகிறோம். என் மனைவி இதை கவனித்து வருகிறார். இந்த அகாடமி மூலம் இளைஞர்களை பாடி பில்டிங் துறையில் ஊக்குவிக்க இருக்கிறோம். அதற்கு தமிழக அரசும் பொருளாதார ரீதியாக உதவும் என்று நம்புகிறோம், என்று மிகவும் மகிழ்ச்சியாக பாஸ்கரன் பேட்டி அளித்துள்ளார்.
இவரின் முழு பேட்டியை காண இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்!