ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சற்று முன் நடந்த ட்ரிபுள் ஜம்ப் இறுதிப் போட்டியில் இந்தியாவின் அர்பிந்தர் சிங் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தியாவுக்கு இது பத்தாவது தங்கமாகும்.
இந்தியா சார்பில் ஆசிய போட்டிகளில் ட்ரிபுள் ஜம்ப் பிரிவில் அர்பிந்தர் சிங் மற்றும் ராகேஷ் பாபு பங்கேற்றனர். இதில் ஆறு வாய்ப்புகளில் அதிக தூரம் தாண்டிய அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
அந்த வகையில், இந்தியாவின் அர்பிந்தர் சிங், தன் மூன்றாவது வாய்ப்பில் 16.77 மீட்டர் தாண்டினார். தன் முதல், ஐந்து மற்றும் ஆறாம் வாய்ப்பில் தவறு செய்தார். எனினும், இரண்டாம் வாய்ப்பில் அவர் தாண்டிய தூரத்தை அதன் பின் யாரும் முறியடிக்கவில்லை. இதனால், முதல் இடத்தைப் பிடித்து தங்கம் வென்றார் அர்பிந்தர் சிங்.
மற்றொரு இந்தியரான ராகேஷ் பாபு, தன் சிறந்த பதிவாக 16.40 மீட்டர் மட்டுமே தாண்டி ஆறாம் இடத்தை பிடித்தார். இரண்டாம் இடத்தை உஸ்பெகிஸ்தான் வீரர் குர்பானோவ் பிடித்தார். மூன்றாம் இடத்தை சீனாவின் காவோ ஷு பிடித்தார்.
பதக்கப் பட்டியலில் பின்தங்கி இருக்கும் இந்தியாவிற்கு பெரிய ஆறுதலாக இந்த பத்தாவது தங்கம் அமைந்துள்ளது.