ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாளான இன்று துடுப்புப் படகுப் போட்டியில் இந்தியா தன் மூன்றாவது பதக்கத்தை வென்றுள்ளது. சவர்ன் சிங், தத்து போகன்லால், ஓம் பிரகாஷ், சுக்மீத் சிங் ஆகியோர் ஆடவர் நால்வர் ஸ்கல்ஸ் பிரிவு இறுதிச் சுற்றில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
ஆடவர் நால்வர் ஸ்கல்ஸ் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியா போட்டி தூரத்தை 6:17.13 நிமிடங்களில் கடந்து முதல் இடத்தை பிடித்தது. இதன் மூலம் துடுப்புப் படகுப் போட்டியில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதல் தங்கத்தை வென்றது. இதே போட்டியில் இந்தோனேசியா இரண்டாம் இடமும், தாய்லாந்து மூன்றாம் இடமும் பிடித்தன.
முன்னதாக இன்று துடுப்புப் படகுப் போட்டியில் இரண்டு வெண்கலம் கிடைத்தது. இந்தியாவின் துஷ்யந்த் ஆடவர் ஒற்றையர் துடுப்புப் படகுப் போட்டியில் வெண்கலம் வென்றார். இந்தியா 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 12 வெண்கலம் வென்றுள்ளது.
இதில் துப்பாக்கி சுடுதலில் எட்டு பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், கபடியில் ஒரு பதக்கம், துடுப்புப் படகுப் போட்டியில் மூன்று பதக்கங்கள், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம், டென்னிஸில் ஒரு பதக்கம், வுஷுவில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது.