ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் இரட்டையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ரோஹன் போபண்ணா, திவிஜ் சரண் இணை தங்கம் வென்று இந்தியாவின் தங்கப் பதக்கங்களை அதிகரித்துள்ளது.
சற்று முன் நடந்த ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் புப்ளிக், எவ்செஏவ் இணையை சந்தித்த போபண்ணா, திவிஜ் சரண் இணை, 6-3, 6-4 என நேர் செட்களில் வெற்றி வாகை சூடியது.
இதன் மூலம் இந்த முறை ஆசிய விளையாட்டில் டென்னிஸில் முதல் தங்கத்தை வென்றது. இந்தியாவுக்கு இது 22வது பதக்கமாகும். இதற்கு முன் பெண்கள் ஒற்றையர் டென்னிஸில் அங்கிதா ரெய்னா வெண்கலம் வென்று இருந்தார். தற்போது இந்த தங்கம் மூலம் டென்னிஸிற்கு இரண்டாவது பதக்கம் கிடைத்துள்ளது.
முன்னதாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆறாம் நாளான இன்று துடுப்புப் படகுப் போட்டியில் ஆடவர் நால்வர் ஸ்கல்ஸ் பிரிவில் ஒரு தங்கமும், ஆடவர் ஒற்றையர் பிரிவில் துஷ்யந்த் ஒரு வெண்கலமும், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோஹித் குமார், பகவான் சிங் இணை ஒரு வெண்கலமும் வென்றனர்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
2018 ஆசிய விளையாட்டில் இந்தியா இதுவரை 22 பதக்கங்கள் வென்றுள்ளது. இதில் துப்பாக்கி சுடுதலில் எட்டு பதக்கங்கள், மல்யுத்தத்தில் மூன்று பதக்கங்கள், கபடியில் ஒரு பதக்கம், துடுப்புப் படகுப் போட்டியில் மூன்று பதக்கங்கள், செபக்டக்ராவ்-இல் ஒரு பதக்கம், டென்னிஸில் இரண்டு பதக்கங்கள், வுஷுவில் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளது.