ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியா தனது கடைசி நாளில் விளையாடி வருகிறது. குத்துச்சண்டை போட்டிகளில் இந்தியா தடுமாறி வந்த நிலையில், அமித் பங்கால் அதிரடியாக தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆடவர் லைட்பிளை 49 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அமித் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இன்று நடந்த இறுதியில், உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் தாஸ்மாடோவ்-ஐ சந்தித்தார். அந்த வீரர் ஒலிம்பிக் சாம்பியன் என்பதோடு, எதிராளிகளிடம் அதிக ஆதிக்கம் செலுத்தும் வீரர் என்ற பெயரும் பெற்றவர்.
அந்த வலிமையான வீரரை எதிர்கொண்ட அமித், அட்டகாசமாக விளையாடி இந்தியாவுக்கு இந்த ஆசிய விளையாட்டின் 14வது தங்கத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் இந்தியாவின் குத்துச்சண்டை பிரிவுக்கும் மனநிம்மதியை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். இந்தியாவின் சார்பில் பங்கேற்ற விகாஸ் கிருஷ்ணன் தவிர்த்து மற்ற குத்துச்சண்டை வீரர்கள் யாரும், அரையிறுதி வரை கூட தேர்ச்சி பெறவில்லை.
விகாஸ் கிருஷ்ணன் தன் அரையிறுதியில் பங்கேற்கும் முன் காயம் காரணமாக நீக்கப்பட்டார். எனவே, அவருக்கு வெண்கலம் மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில் அமித் வென்ற தங்கம் குத்துச்சண்டையின் முக்கிய பதக்கமாகும்.