ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று 12ஆம் நாள் மாலை இந்தியா தடகளத்தில் ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் வென்றுள்ளது. ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சன் தங்கம் வென்றார். அடுத்து மகளிர் டிஸ்கஸ் த்ரோவில் சீமா புனியா மற்றும் மகளிர் 1500 மீட்டர் ஓட்டத்தில் சித்ராவும் வெண்கலம் வென்றனர்.
ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜின்சன் ஜான்சன், மன்ஜித் சிங் ஆகியோர் இந்தியா சார்பாக பங்கேற்றனர். இவர்கள் இருவரும் ஆடவர் 800 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்றவர்கள் என்பதால் இவர்கள் மீது எதிர்பார்ப்பு இருந்தது.
பனிரெண்டு பேர் பங்கேற்ற இறுதிப் போட்டியில் ஜின்சன் ஜான்சன் முதல் இடம் பிடித்தார். 800மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற மன்ஜித் சிங் ஒரு வினாடி வித்தியாசத்தில் வெண்கலத்தை தவறவிட்டு நான்காம் இடம் பிடித்தார். போட்டி தூரத்தை ஜின்சன் 3:44.72 நிமிடங்களில் கடந்தார். ஈரான் நாட்டை சேர்ந்த மோராடி அமீர் இரண்டாம் இடமும், பஹ்ரைனின் டியூஅலி மூன்றாம் இடமும் பிடித்தனர்.
மகளிர் 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சித்ரா உன்னிகிருஷ்ணன் வெண்கலம் வென்றார். முதல் இரண்டு இடத்தை பஹ்ரைன் வீராங்கனைகள் பிடித்தனர்.
மகளிர் டிஸ்கஸ் த்ரோவில் இந்தியாவின் சீமா புனியா வெண்கலம் வென்றார். முதல் இரண்டு இடங்களை சீனாவின் சென் யங், பெங் பின் பிடித்தனர். மற்றொரு இந்திய வீராங்கனை சந்தீப் குமாரி ஐந்தாம் இடத்தை பிடித்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
இதன் மூலம், இந்தியா இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து ஒரு தங்கம், இரண்டு வெண்கலம் வென்றது. தற்போது இந்தியா 12 தங்கம், 20 வெள்ளி, 25 வெண்கலம் வென்று, மொத்தமாக 57 பதக்கங்கள் வென்றுள்ளது.