ஜகார்த்தா : சௌரவ் கோஷல் ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று மூன்றாவது ஸ்குவாஷ் தோல்வியாகும்.
சற்று முன், தீபிகா பல்லிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா அரையிறுதியில் தோற்று வெண்கலம் வென்றனர். சௌரவ் கோஷல் மட்டுமாவது இறுதிப் போட்டி வரை செல்வாரா என்ற எதிர்பார்ப்பை உடைத்து, அவரும் அரையிறுதியோடு தன் ஆசிய விளையாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
ஆடவர் ஒற்றையர் ஸ்குவாஷ் அரையிறுதியில் ஹாங்காங்கின் ஆவ் சுன் மிங்-ஐ சந்தித்த சௌரவ், துவக்கத்தில் 2-0 என முன்னிலையில் இருந்தார். எனினும், அடுத்த மூன்று செட்களை வரிசையாக இழந்து 2-3 என தோல்வி அடைந்தார்.
இவர் 2014 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா இன்று இதுவரை மூன்று பதக்கங்கள் வென்றுள்ளது. மூன்றுமே ஸ்குவாஷ் பிரிவில் பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
இந்தியா இதுவரை 28 பதக்கங்கள் வென்றுள்ளது. அதில் 17 வெண்கலம் ஆகும். தங்கம் வென்றால் மட்டுமே பதக்கப் பட்டியலில் உயர முடியும் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து வெண்கலம் மட்டுமே வென்று வருகிறது.