ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சற்று முன் நடந்த ஷாட் புட் இறுதியில் தங்கம் வென்றார் தாஜிந்தர்பால் சிங். இந்த போட்டியில் அவர் ஆசிய போட்டிகளில் ஷாட் புட் எறிதலில் புதிய சாதனை படைத்தார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று முதல் தடகளப் போட்டிகள் தொடங்கியுள்ளன. அதில் முதல் பதக்கமாக தாஜிந்தர்பால் சிங்கின் ஷாட் புட் தங்கம் அமைந்துள்ளது. இந்த போட்டியில் அவர் 20.75 மீட்டர் தூரம் ஷாட் புட் வீசி ஆசிய விளையாட்டில் புதிய சாதனை படைத்தார்.
இவருக்கு அடுத்த இடங்களை சீனாவின் லியு யாங் (19.52 மீட்டர்), மற்றும் கஜகஸ்தானின் இவானோவ் இவான் (19.40) பிடித்தனர். இந்த போட்டியில் ஆறு முறை ஷாட் புட் வீச வாய்ப்பு கிடைக்கும். ஆறு முயற்சிகளில் எது அதிக தூரமோ அதுவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில், முதல் முயற்சியில் 19.96 மீட்டர் வீசினார் தாஜிந்தர்பால் சிங். அந்த தூரத்தை இறுதி வரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
தன் ஐந்தாம் வாய்ப்பில் 20.75 மீட்டர் தூரம் வீசி ஆசிய விளையாட்டில் சாதனை படைத்தார். ஆறாம் வாய்ப்பில் 20.00 மீட்டர் வீசினார். இந்த சாதனை மூலம் இந்தியாவுக்கு தாஜிந்தர்பால் சிங் ஏழாவது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.