டெல்லி: அர்ஜுனா விருதுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. கடைசியாக பங்கேற்ற அமித் பங்கால் தங்கம் வென்று அசத்தினார். அதிலும், அவர் உலகின் முன்னணி வீரர் மற்றும் ஒலிம்பிக் தங்கம் வென்ற உஸ்பெகிஸ்தான் குத்துச்சண்டை வீரரை தோற்கடித்தார்.
அர்ஜுனா விருதுக்கு இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு அமித் பெயரை பரிந்துரை செய்துள்ளது. இதில் ஒரு சிக்கலும் உள்ளது. 2012ஆம் ஆண்டு அவர் ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி ஒரு வருடம் தடை பெற்றுள்ளார்.
அது பற்றி கூறிய அமித், "அது நான் இளம் வயதில் இருக்கும் போது நடந்தது. எனக்கு அதெல்லாம் என்னவென்றே தெரியாது. எனக்கு அப்போது பெரியம்மை வியாதி வந்தது. அதற்கு மருத்துவர் அளித்த மருந்துகளில் ஏதேனும் இருந்திருக்கலாம்" என விளக்கமளித்தார்.
குத்துச்சண்டை பிரிவில் மூன்று வீரர்கள் பெயர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆசிய போட்டி வெள்ளி வென்ற சோனியா, உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்ற பிதுரி ஆகியோர், அமித்துக்கு போட்டியாக இருக்கின்றனர்.
அர்ஜுனா விருது விழா வரும் செப்டம்பர் 25 அன்று நடைபெற உள்ளது. இது வரை ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 அன்று தான் அர்ஜுனா விருது விழா நடைபெறும், இந்த ஆண்டு அந்த தேதியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்ற காரணத்தால், தேதி தள்ளி வைக்கப்பட்டது.