டெல்லியில் நடைபெறுகிறது
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்று வருகின்றன. இதில் பல்வேறு எடைபிரிவுகளில் நடத்தப்படும் போட்டிகளில் பல்வேறு வீரர்கள் மற்றம் வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர். ஹரியானாவை சேர்ந்த ஆசு, ஹர்தீப், பஞ்சாபை சேர்ந்த அதித்யா குண்டூ ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம்
இதனிடையே பல்வேறு எடைப்பிரிவுகளில் நடத்தப்பட்ட மல்யுத்த போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் ஒரே நாளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர். பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் இந்த ஆண்டிற்கான இந்திய தங்கக் கனவை இவர்கள் நிறைவேற்றி வைத்துள்ளனர்.
சாதித்த மங்கைகள்
இந்த போட்டிகளில் 68 கிலோ எடைப்பிரிவில் திவ்யா கக்ரன், 59 கிலோ எடைப்பிரிவில் சரிதா மோர் மற்றும் 55 கிலோ எடைப்பிரிவில் பிங்கி ஆகியோர், தங்களை எதிர்த்து போட்டியிட்ட வீராங்கனைகளை முறியடித்து தங்கம் வென்றுள்ளனர். ஆனால் 55 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட நிர்மலா தேவி ஜப்பானை சேர்ந்த இகராஷி மிஷோவிடம் 2க்கு 3 என்ற செட்கணக்கில் தோல்வியுற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஜப்பான் வீராங்கனையிடம் போட்டி
டெல்லியை சேர்ந்த திவ்யா கக்ரன் சர்வதேச ஜூனியர் சாம்பியன்ஷிப் வெற்றியாளரான ஜப்பான் வீராங்கனை மாட்சுயுகி நருஹாவை எதிர்த்து இறுதிப்போட்டியில் போட்டியிட்டார். உத்தரபிரதேசம் சார்பில் விளையாடிவரும் இவர், லக்னோவின் சாய் மையத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர் விளாடிமிர் மெஸ்ட்விரிஷ்விலியிடம் கடந்த 5 மாதங்களாக பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தங்கம் வென்ற பிங்கி
இதனிடையே மங்கோலிய வீராங்கனை போலோர்மா துல்குனுடன் போட்டியிட்ட ரோதக்கை சேர்ந்த பிங்கி, முழங்கை காயத்துடன் விளையாடி போராடி வெற்றி பெற்றுள்ளார். இவர் முதல் முறையாக சீனியர் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். போட்டி முடிவடைவதற்கு ஒரு நிமிடங்களே இருந்த நிலையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டு எதிரணி வீராங்கனையை வீழ்த்தினார் பிங்கி.
தங்கம் என்று சரிதா சாதனை
இதனிடையே 59 கிலோ எடைப்பிரிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மங்கோலிய வீராங்கனை அல்டான்செட்டெக் பேட்செட்ஸெக்சை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீராங்கனை சரிதா மோர், 11 விநாடிகள் இருந்தபோது, வெற்றிபெற்று தங்கத்தை தன்வசமாக்கியுள்ளார். இவர் கடந்த 2017 ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றவர்.
முறியடித்த ஜப்பான் வீராங்கனை
இதனிடையே இந்தியாவிற்கு 4வது தங்கப்பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை ஜப்பானின் இகராஷி மிஹோ தகர்த்தார். இறுதிப்போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் இவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய வீராங்கனை நிர்மலா தேவி, 2க்கு 3 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார். மியோ அன்டர் 23 பிரிவில் இரண்டுமுறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர்.
|
மேலும் தங்கம் கிடைக்கும் என எதிர்பார்ப்பு
இதனிடையே தங்கம் வென்றுள்ள விராங்கனைகளுக்கு மத்திய விளையாட்டுத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். திவ்யா, சரிதா, பிங்கி மற்றும் நிர்மலா தேவி ஆகியோரின் பெயர்களை தனித்தனியாக குறிப்பிட்டு, இவர்கள் இந்தியாவின் பெருமைகள் என்று குறிப்பிட்டுள்ள அவர், மேலும் அதிக தங்கப்பதக்கங்களை இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.