டோக்கியோ : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஜூலை 24ம் தேதி டோக்கியோவில் துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகளை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு வருடத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளுக்கென சர்வதேச அளவில் பல நாடுகளில் 57 சதவிகிதம் தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த தகுதிச்சுற்று போட்டிகளில் தேர்வானவர்கள், அடுத்த ஆண்டிற்குள் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் நேரடியாக பங்கேற்கலாம் என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் அனைத்து விளையாட்டு போட்டிகளும் ரத்து அல்லது ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதற்கு இந்த ஆண்டு டோக்கியோவில் வரும் ஜூலை 24ம் தேதி துவங்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகளும் தப்பவில்லை. இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில், தற்போது ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச்சிடம் மேற்கொண்ட தொலைபேசி ஆலோசனையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதிகபட்சம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த போட்டிகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்பது அவரின் அறிவிப்பாக உள்ளது.
இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாகிகள், சர்வதேச அளவில் 32 விளையாட்டு பெடரேஷனுடன் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். இந்தக் கூட்டத்தில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 11,000 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கவிருந்த நிலையில், அதில் 57 % வீரர்களின் தகுதிச்சுற்று ஏற்கனவே முடிந்துவிட்டது. இந்நிலையில், அவர்கள் அனைவரும், மீண்டும் தகுதிப்போட்டியில் பங்கேற்காமல் நேரடியாக அடுத்த ஆண்டிற்குள் நடத்தப்பட உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று இந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தலாம் என்று சில பிரிவினரும், ஜூன் மாதத்தில் நடத்த சில தரப்பினரும் இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஆயினும் போட்டிகள் நடத்தப்படும் குறிப்பிட்ட மாதம் மற்றும் தேதி இந்தக் கூட்டத்தில் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் எஞ்சியுள்ள தகுதிச்சுற்று போட்டிகளை நடத்த 3 மாதங்கள் பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 4 வாரங்களுக்குள் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட உள்ள தேதி குறித்து உறுதி செய்யப்படும் என்று ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாச் உறுதியளித்துள்ளதாகவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வீரர் ஒருவர் கூறியுள்ளார்.