பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தால் அந்த அணி 505 ரன்களை குவித்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் தடுமாற்றத்துடன் ஆடிய இந்தியா, 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது.
பிரிஸ்பேனில் நடந்துவரும் 2வது டெஸ்டில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முரளி விஜயின் 144 ரன்கள் உதவியுடன் முதல் இன்னிங்சில் 408 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 221 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் இன்று நிலைமை மாறியது.
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமிட்டு ஆடி 133 ரன்களை குவித்தார். மிச்சேல் மார்ஸ் 11, ஹேடின் 6 ரன்கள் எடுத்து அவுட் ஆனபோதிலும், டெயில் என்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
வேகப்பந்து வீச்சாளர்களான ஜான்சன் 88 ரன்கள், ஸ்டார்க் 52 ரன்களை குவித்தனர். சுழல்பந்து வீச்சாளர் நேதன் லையன் 23 ரன்கள் எடுத்தார். ஆஸ்திலேலிய அணி 505 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவின் 5 விக்கெட்டுகளை முதல் இன்னிங்சில் வீழ்த்திய பவுலர் ஹஸ்ல்வுட் 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஆரோன் இறு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கடைசி கட்டத்தில் பவுலர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தினர். ஆஸ்திரேலியா 97 ரன்கள் முன்னிலை வகித்த நிலையில் இந்தியா 2வது இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கியது. முரளி விஜய், ஷிகர் தவான் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த முரளி விஜய், ஸ்டார்க் பந்து வீச்சில் 27 ரன்களில் போல்ட் ஆகி அதிர்ச்சி அளித்தார். தடுப்பு ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி ஆட்ட நேர இறுதியில் 71 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.
தவான் 26 ரன்களுடனும், புஜாரா 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்னும் இரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது.