அடிலெய்ட்: இந்தியா-ஆஸி. அணிகளுக்கு நடுவேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
ரசிகர்களின் நகத்தை கடிக்கச் செய்த இந்த போட்டி இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக முடிந்தது.
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு நகரில் நடந்து வந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 517 ரன்கள் குவித்து 'டிக்ளேர்' செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய 444 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
73 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியாவின் 2வது இன்னிங்சை டேவிட் வார்னரும், கிறிஸ் ரோஜர்சும் தொடங்கினர். முதல் இன்னிங்சில் சதம் அடித்த வார்னர் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 69 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 290 ரன்கள் சேர்த்திருந்தது. ஒட்டுமொத்தமாக 363 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த ஆஸ்திரேலியா நேற்றைய ஸ்கோரோடு டிக்ளேர் செய்தது.
இதன் படி இந்திய அணி 364 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜய் மற்றும் ஷிகர் தவான் ஆகியோ களம் இறங்கினார். ஷிகர் தவான் 9 ரன்கள் எடுத்து இருந்த போது ஜான்சன் வீசிய ஷாட் பிட்ச் பந்து அவரது தோள்பட்டையில் பட்டு எகிறியது. இதை விக்கெட் கீப்பர் பிராட் ஹேடின் கேட்ச் பிடித்தார். நடுவரின் தப்பான முடிவால் தவான் வெளியேற நேர்ந்தது. இதைதொடர்ந்து வந்த புஜாரா 21 ரன்களில் லாயன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதன்பிறகு களமிறங்கி கோஹ்லி கேப்டனுக்குறிய பொறுப்போடு ஆடினர். இந்த ஜோடியை பிறிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறினர். ஸ்கோர் 242 ரன்னாக இருந்தபோது சுழல் பந்து வீச்சாளர் லையன் பந்து வீச்சில் முரளி விஜய் 99 ரன்களில் அவுட் ஆனார். அப்போதைய நிலையில் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது.
ஆனால் அதன்பிறகு களமிறங்கிய ரஹானே டக்-அவுட் ஆகி ஏமாற்றினார். ரோகித் ஷர்மா 6 ரன்களில் அவுட் ஆகினார். இதனால் கோஹ்லிக்கு கம்பெனி கிடைக்காமல் தடுமாற்றம் ஏற்பட்டது. விக்கெட் கீப்பர் சாஹா, கோஹ்லிக்கு பார்ட்னர்ஷிப் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 13 ரன்களில் அவுட் ஆனார். தேவையில்லாமல் விக்கெட்டை விட்டு இறங்கி வந்து போல்ட் ஆகி ரசிகர்களின் கடுப்பை சம்பாதித்தார் சாஹா.
அவருக்கு பிறகு முழுமையான பேட்ஸ்மேன்கள் கிடையாது என்பதால் பவுலர்களால் நிலைந்து நின்று ஆட முடியவில்லை. இதனிடையே மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கோஹ்லி 141 ரன்னில் எதிர்பாராமல் அவுட் ஆகினார். அப்போதே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு முடிந்துவிட்டது. இருப்பினும் டிரா செய்ய டெயில் என்டர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் பலனளிக்கவில்லை.
வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா ஆகியோர் தலா 1 ரன்களில் பெவிலியனுக்கு நடையை கட்ட கரண் ஷர்மா 4 ரன்களுடன் களத்தில் நின்றார். 87.1 ஓவரில் இந்தியா 315 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை இப்போட்டி பரபரப்பாக இருந்தது. இந்தியாவின் கைக்கு எட்டிய வெற்றியை ஆஸ்திரேலியாவுக்கு பறித்து சென்ற சுழற்பந்து வீச்சாளர் லையன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.