மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவில் போட்டியிட்ட பஜ்ரங், முன்னதாக இரண்டு போட்டிகளில் பத்து புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிகளைப் பெற்று அசத்தினார் இவர்.
ஆண்கள் 65 கிலோ பிரீஸ்டைல் பிரிவு மல்யுத்தத்தின் இறுதிப் போட்டி சற்று முன் நடைபெற்றது. அதில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஜப்பானின் தாய்ச்சி-ஐ 11-8 என்ற புள்ளிகள் பெற்று வீழ்த்தினார். இதன் மூலம் பஜ்ரங் தங்கப் பதக்கத்தை வென்றார். தோல்வி அடைந்த தாய்ச்சி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
[ஆசிய விளையாட்டு 2018 இந்திய வெற்றியாளர்கள்]
முதல் போட்டியில், தஜிகிஸ்தான் நாட்டின் அப்துல்கொசிம்-ஐ 12-2 என பத்து புள்ளிகள் முன்னிலை பெற்று வீழ்த்தினார். அடுத்து நடந்த அரையிறுதியில், மங்கோலியாவின் பத்மக்னாய்-ஐ 10-0 என அதிரடியாக வீழ்த்தி அனைவரையும் யார் இந்த பஜ்ரங் புனியா என ஒரே நாளில் கேட்க வைத்துவிட்டார்.
[ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018]
இந்த அரையிறுதி வெற்றிக்கு பின் இந்தியாவிற்கு ஒரு பதக்கம் உறுதி ஆனது. இதனால், இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கில் வந்துவிட்டார் பஜ்ரங். இப்போது, தங்கமும் வென்று அசத்தி உள்ளார். மற்றொரு, மல்யுத்த வீரர் பவன் குமார் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாளில் இந்தியாவுக்கு இது வரை வெண்கலப் பதக்கம் மட்டுமே கிடைத்து இருந்தது. பதக்கப் பட்டியலில் மிகவும் பின்தங்கி இருந்த இந்தியா, தற்போது இந்த தங்கப் பதக்கம் மூலம் சற்று நிம்மதி அடையலாம்.