தடை விதிக்கப்பட்ட ரஷ்யா
ஊக்க மருந்து விவகாரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரஷ்யாவிற்கு 4 ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு முகமை கடந்த ஆண்டில் உத்தரவிட்டது. இதையடுத்து ரஷ்யாவின் கொடி, தேசிய கீதம் மற்றும் பெயரை பயன்படுத்த முடியாது என்று உத்தரவிடப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு தடை
இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், தற்போது விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றம் இந்த தடையை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அடுத்த இரண்டு ஒலிம்பிக் தொடர்கள் மற்றும் 2 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பங்கேற்க தடை
இந்த தடை காரணமாக அடுத்து நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டி உள்ளிட்ட இரண்டு ஒலிம்பிக் தொடர்களில் விளையாடுவதில் இருந்து அந்த நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச போட்டிகளில் விளையாடவும் அந்த நாட்டிற்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி கண்டனம்
இதனிடையே, அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட சில அலுவலர்களுக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதினுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அந்நாட்டின் ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
ரஷ்ய வீரர்களுக்கு பச்சைக்கொடி
ஆயினும் அந்நாட்டின் பெயர், கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்தாமல் ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் ஊக்க மருந்து சோதனையில் சிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.