மொஷராப் ஹுசைன்
வங்கதேச அணியின் முன்னாள் வீரர் மொஷராப் ஹுசைன். அவருக்கு தற்போது 38 வயது ஆகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகளில் வங்கதேச அணிக்காக ஆடி உள்ளார். அவர் கடந்த நான்கு மாதங்களாக மூளையில் ஏற்பட்ட கட்டி மற்றும் பிற உபாதைகளால் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
அறிகுறிகள்
இந்த நிலையில், அவரது தந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் அவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதை அடுத்து அவர் பரிசோதனை செய்ததில் அவருக்கும் பாதிப்பு உறுதி ஆனது.
வீட்டிலேயே தனிமை
அவரது தந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், தனக்கு மோசமான அறிகுறிகள் ஏதும் இல்லாததால் வீட்டிலேயே தனிமையில் இருப்பதாக மொஷராப் ஹுசைன் கூறி உள்ளார்.
வங்கதேசத்தில் பாதிப்பு
வங்கதேச நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவத் துவங்கி உள்ளது. ஜூன் மாதம் முதல் பாதிப்பு அதிகரித்து வந்தது, தற்போது 2,60,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3430க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
முன்னாள் வீரர்கள் பாதிப்பு
வங்கதேச நாட்டில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என கருதப்படுகிறது. அங்கே போதிய மருத்துவ வசதிகள் இல்லை என்ற புகாரும் உள்ளது. முன்னதாக முன்னாள் வங்கதேச அணி கேப்டன் மஷ்ராபே மொர்டாசா, முன்னாள் வீரர்கள் நஜ்முல் இஸ்லாம், நபீஸ் இக்பால் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.