ஏமாற்றம்
லோவ்லினா வெண்கலம் வென்ற நிலையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இரண்டு வெண்கலம், ஒரு வெள்ளி பதக்கங்களை இந்தியா பெற்று உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்ஜித், மேரி கோம் ஆகிய இரண்டு பேரும் தோல்வியை சந்தித்த நிலையில் லோவ்லினா மட்டும் பாக்சிங்கில் நம்பிக்கை அளித்தார். ஆனால் இன்று அவரும் தோல்வியை தழுவி உள்ளார். லோவ்லினா போர்கோஹைன் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் 2018, 2019 உலக பெண்கள் பாக்சிங்கில் வெண்கல பதக்கம் வென்றார். இதன் மூலம் முதல்முறையாக ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
யாருக்காவது தெரியுமா?
ஒரு வாரத்திற்கு முன்பு வரை அசாமின் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள லோவ்லினா போர்கோஹைனின் பரோமுகியா கிராமத்தை பற்றி எவரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு மண் மற்றும் கல் பாதை தான் அந்த கிராமத்தை வெளி உலகத்துடன் இணைத்தது. ஆனால் இன்று, விஷயங்கள் மாறி வருகின்றன. அந்த கிராமத்தை நோக்கி மீடியாக்கள் படையெடுத்து வருகின்றன. தேசத்தின் ஒட்டுமொத்த பார்வையும் திரும்பியுள்ளது. காரணம் லோவ்லினா. ஆம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் லாவ்லினா பதக்கம் வென்ற பிறகு, இவை அனைத்தும் மாறிவிட்டது.
தாய் மண்
கடந்த ஆண்டு லாக் டவுனில் போது, லோவ்லினா தனது தந்தை டிக்கன் போர்கோஹைனுக்கு நெல் வயல்களில் உதவி செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து லோவ்லினா தந்தை இந்தியா டுடேவுக்கு அளித்துள்ள பேட்டியில், "நெல் வயலில் வேலை செய்வது அவளுக்கு ஒரு புதிய விஷயம் அல்ல. அவள் இதை நீண்ட காலமாக செய்து வருகிறாள். அதை செய்ய வேண்டாம் என்று நாங்கள் அவளிடம் கூறினோம். ஆனால் அது தாய் மண்ணின் வேர்களுடன் இணைந்திருக்க உதவுகிறது என்று அவள் கூறுகிறாள்" என்று டிக்கன் போர்கோஹெய்ன் கூறினார்.
மிகவும் கடினமானது
லோவ்லினாவின் பயணம் அவ்வளவு கடினமானது. ஒலிம்பிக் பதக்கம் வெல்வதற்கு பல சிரமங்களைச் சந்தித்துள்ளார். கடந்த ஆண்டு ஜூலையில், பெரும்பாலான வீரர்கள் பயிற்சிக்காக பாட்டியாலாவில் உள்ள தேசிய முகாமுக்கு வந்தபோது, லோவ்லினா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட தனது தாயாரை கவனித்துக் கொள்வதில் மும்முரமாக இருந்தார். கொரோனா தொற்று எல்லா இடங்களிலும் முடக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிலும் பயிற்சி முகாம்கள் மீண்டும் திறந்த பிறகும் குத்துச்சண்டை வீரர்கள் சிறிது காலத்திற்கு பயிற்சியைத் தொடங்க அனுமதிக்கப்படவில்லை.
தோற்றாலும் இப்போ ஓகே
ஒலிம்பிக்கிற்கு தயாராக இருக்க, இந்திய விளையாட்டு ஆணையம் பயிற்சி உபகரணங்களை அனுப்புவதற்கு முன்பு அவர் ஒரு வெற்று எல்பிஜி சிலிண்டருடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், அவர் தனது முதல் போட்டியில் தோல்வியடைந்தார், இருப்பினும் தற்போது அவர் ஒலிம்பிக்கை வெண்கலப் பதக்கத்துடன் முடிக்க முடிந்தது
உதறலான பயணம்
2009ல் பயிற்சியாளர் பிரஷாந்த் குமார் தாஸிடம் பயிற்சிப் பெற லோவ்லினா எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார் என்பதை அவரது தந்தை வேதனையுடன் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், "இதனை கற்பனை செய்வது கடினம், Barpatharக்கு 3-4 கிமீ, லாவ்லினா தனது சகோதரிகளுடன் மிதிவண்டியில் செல்வார்கள். சில சமயங்களில் அவர்கள் காயங்களுடன் திரும்புவார்கள். அந்த சாலை கூழாங்கற்களால் நிரம்பியது. அடிக்கடி கீழே விழுந்து காயம் ஏற்படும். அவர்களது அந்த பயணத்தை இப்போது நினைத்தாலும் உதறலாக உள்ளது" என்று அவர் நினைவு கூர்ந்தார்.
தங்கம் ஜெயிக்கணும்னா!?
நாம் இங்கு உட்கார்ந்து கொண்டு.. வெள்ளிப்பதக்கம் ஜெயிக்கலையே, தங்கம் ஜெயிக்க முடியலையே என்று வாதம், விவாதம், அரட்டை செய்கின்றோம். ஆனால், நம் நாட்டில் ஒரு ஒலிம்பிக் மெடலுக்கு பின்னால் எத்தனை எத்தனை கதை இருக்கிறது என்று பாருங்கள். இவர்களுக்கு முறையான பயிற்சியும், வசதியும், ஊக்கமும் அளித்தால் தான் தங்கப்பதக்கங்களை நாம் சாத்தியமாக்க முடியும். அதுவரை வெள்ளியும், வெண்கலமுமே நமது பெருமைகளாக இருக்கும்.