வட்டு எறிதல்
இந்தியாவைப் பொறுத்தவரை, இதுவரை 2 மெடல்கள் வெல்லப்பட்டுள்ளன. பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் கைப்பற்ற, பேட்மிண்டன் வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றுக் கொடுத்தார். அதேசமயம், குத்துச்சண்டையில் லோவ்லினா ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரையிறுதியிப் போட்டிக்காக காத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, பெண்கள் வட்டு எறிதல் (Discus Throw) போட்டியில், இந்தியாவின் கமல்ப்ரீத் கவுர் 64 மீட்டர் தூரம் வீசி, 31 வீராங்கனைகளில் இரண்டாம் இடம் பிடித்து அசத்தினார். இன்று (ஆக.2) இறுதிப் போட்டியில் களமிறங்க காத்திருக்கிறார். இவற்றைத்தவிர இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, பெண்கள் ஹாக்கி அணி ஆகியவை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ள. இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், இதுவரை இந்தியாவுக்காக பதக்கங்களை உறுதி செய்திருப்பது பெண்கள் மட்டுமே.
ஆடம் பீட்டி
இந்த நிலையில் தான் தான் தீராத மன அழுத்தத்தில் இருப்பதாக அறிவித்து அதிர வைத்துள்ளார் இங்கிலாந்தின் நட்சத்திரம் நீச்சல் வீரர் ஆடம் பீட்டி. இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் 100 மீ ப்ரெஸ்ட்ரோக் பிரிவிலும், 4x100 மீ கலப்பு மெட்லே ரிலேவிலும் தங்கம் வென்றவர். அதுமட்டுமின்றி, ஆண்கள் 4x100 மீ மெட்லியில் வெள்ளி வென்று அசத்தியவர். இப்படி தங்கப்பதக்கங்களை அள்ளிய ஆடம், திடீரென தான் கடுமையான மன உளைச்சலில் இருப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான்காவது வீரர்
இந்த ஒலிம்பிக் தொடரில் இருந்து இவ்வாறு மன அழுத்தம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்கும் 2வது வீரர் இவர். அதுமட்டுமின்றி, கடந்த மூன்று மாதங்களில் சர்வதேச அளவில் மன அழுத்தம் குறித்து பேசியிருக்கும் நான்காவது விளையாட்டு வீரரும் இவர் தான். கடந்த சில நாட்களுக்கு முன், அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், இதே போன்று, தான் மன அழுத்தத்தில் இருப்பதாகவும், ஆகையால் ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாகவும் தடாலடியாக அறிவித்திருந்தார். அதேபோல், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் சமீபத்தில் மன அழுத்தம் காரணமாக, கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர்கள் அனைவருக்கும் முன்பாகவே, 2 மாதங்களுக்கு முன்பு ஜப்பானின் நவோமி ஒசாகா இதே போன்று மன அழுத்த பிரச்சனை காரணமாக டென்னிஸ் தொடரில் இருந்து பாதியில் விலகி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரைத் தொடர்ந்து தான் சிமோன் பைல்ஸ், பென் ஸ்டோக்ஸ் என்று நீண்ட லிஸ்ட் இப்போது ஆடம் பீட்டி வரை வந்திருக்கிறது.
தொடரும் சிக்கல்
ஓய்வில்லாத உழைப்பு, வெற்றிப்பெற வேண்டிய கட்டாயம், தன் மீதுள்ள அதிகபட்ச எதிர்பார்ப்பு என அனைத்தும் வீரர், வீராங்கனைகளை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது என்கின்றனர் மனநல நிபுணர்கள். மிக விரைவில் இதற்கான தீர்வுகளை அந்தந்த நாடுகளும், விளையாட்டுச் சங்கங்களும் எடுக்கவில்லை எனில், எதிர்காலத்திலும் இதுபோன்று பலர் மன அழுத்தங்களில் சிக்கித் தவிப்பதை தவிர்க்க முடியாது என்றும் கூறுகின்றனர்.