சர்வதேச போட்டிகள் ரத்து
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியுள்ள பாதிப்பையடுத்து உலகமே முடங்கியுள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் ரத்து அல்லது ஒத்திவைக்கப்பட்டு, வீரர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதனால் ரசிகர்களும் செய்வதறியாது தவித்து வருகின்றனர். உலகமே ஒருவித மயான அமைதியை கடைபிடித்து வருகிறது.
பழமையான தொடர்
இந்நிலையில் மிகவும் பழமையான பிரிட்டீஷ் ஓபன் கோல்ப் போட்டியின் 149வது தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதிமுதல் 19ம் தேதிவரை மிச்சிகனின் கென்ட்டில் ராயல்ஸ் செயிண்ட் ஜார்ஜ் கோல்ப் கிளப்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கென ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது கொரோனா வைரஸ் பீதி காரணமாக இந்த தொடரும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக விம்பிள்டன், ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இரண்டாவது உலகப்போருக்கு பின்பு முதல்முறையாக பிரிட்டீஷ் ஓபன் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த தொடர் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த போட்டிகள் அதே இடத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாகிகள் அறிவிப்பு
இதனிடையே, சர்வதேச அளவில் கொரோனா ஏற்படுத்தியுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டே, இந்த தொடர் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த நேரத்தில் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்றும் ஆர்&ஏ தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார். போட்டியை நடத்த மிகவும் முயற்சித்ததாகவும் ஆனால் தற்போது போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நல்ல முடிவு என கருத்து
இதனிடையே, கடந்த ஆண்டில் பிரிட்டீஷ் ஓபன் கோப்பையை வென்ற அயர்லாந்தை சேர்ந்த ஷேன் லாரி தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளார். ஆயினும் மக்களின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நல்ல முடிவை தான் வரவேற்பதாகவும் அவர் கூறியுள்ளார்.