லாக்டவுனில் கார் பந்தயம் எப்படி?
சரி, கொரோனா வைரஸ் பரவும் சமயத்தில், இந்தியாவே லாக்டவுனில் இருக்கும் போது எங்கே கார் பந்தயம் நடந்தது என கேட்கிறீர்களா? கார் பந்தய பயிற்சி சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து, தங்கள் வீட்டில் சிம் ரேஸிங் செட்டப் செய்து, அதன் மூலம் கார் பந்தய வீரர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள்.
சிம் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடர்
அந்த பயிற்சிக் களம் தற்போது லாக்டவுன் நேரத்தில் கார் பந்தயம் நடத்தப்படும் களமாக மாறி உள்ளது. இது உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஐஆர் ஈஸ்போர்ட்ஸ் நிறுவனம், வோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் நிறுவனத்துடன் இணைந்து இந்திய சிம் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது.
முதல் இடம்
கடந்த ஆண்டு முதல் தொடர் நடத்தப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது தொடர் நடைபெற்றது. ஐந்து ரேஸ் கொண்ட இந்த தொடரில் நான்கில் வெற்றி பெற்ற 20 வயதான சென்னை கார் பந்தய வீரர் சாய் ப்ரித்வி முதல் இடத்தை பிடித்தார்.
வோக்ஸ்வேகன் வாய்ப்பு
இரண்டாவது இடத்தை அப்துல் பாத்தா, மூன்றாவது இடத்தை ரைடன் சாமேர்வேல் பிடித்தனர். முதல் இடம் பிடித்த சாய் ப்ரித்விக்கு பரிசாக வோக்ஸ்வேகன் மோட்டார்ஸ்போர்ட் ரேஸ் காரில் பரிசோதனை ஓட்டம் செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
யார் இந்த சாய் ப்ரித்வி?
சென்னையை சேர்ந்த சாய் ப்ரித்வி கடந்த ஓராண்டாக உண்மையன கார் ரேஸ் ஓட்டிய அனுபவம் கொண்டவர். 20 வயதான அவர் ஹிந்துஸ்தான் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங்கில் பி.டெக் இரண்டாம் ஆண்டு ஆட்டோமொபைல் இன்ஜினீயரிங் படித்து வருகிறார்.
முக்கிய வெற்றிகள்
அவர் இதற்கு முன் ஜேகே டயர்ஸ்-இன் நோவிஸ் கப் பந்தயத்தில் நான்காம் இடம் பிடித்துள்ளார். மீகோ (MECO)-வின் FJRS பந்தயத்தில் மூன்றாம் இடமும், இன்டர்காலேஜ் பந்தயத்தில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளார். அதைத் தொடர்ந்து சிம் ரேஸில் முதல் இடம் பெற்றுள்ளார்.
ஃபார்முலா 1 லட்சியம்
அவரது இலக்கு ஃபார்முலா 1 சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தருவது தான் என்கிறார். இதுவரை இந்திய கார் பந்தய வீரர்கள் ஃபார்முலா 1 சாம்பியன்ஷிப் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துக்கள் சாய் ப்ரித்வி!