சென்னை: 2022ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 11 சுற்று முடிவில் யார் அதிக புள்ளிகள் பெற்றதோ, அந்த அணி சாம்பியன் பட்டத்தை தட்டி செல்லும்.
இந்த நிலையில், தற்போது 10வது சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்திய பி அணியில் களமிறங்கிய தமிழக வீரர் குகேஷ் தொடர்ந்து 8 போட்டியில் வெற்றியும் ஒரு போட்டியில் டிராவும் கண்டு இருந்தார்.
தற்போது 10வது சுற்றில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் இந்திய பி அணி மோதியது. இதில் குகேஷ், நோடிர்பெக் என்ற வீரருடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குகேஷ், 72வது நகர்த்தலில் தோல்வியை தழுவினார். இதே போன்று நட்சத்திர வீரர் பிரக்ஞானந்தா சிண்டாரோவ் என்ற வீரருடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் 77வது நகர்த்தலில் பிரக்ஞானந்தா வெற்றியை பெற்றார். இதே போன்று மற்ற 2 வீரர்களான நிஹல் மற்றும் அந்திபன் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதில் இரு அணிகளும் தலா 2 புள்ளிகளை பெற்று சமனில் முடிந்தது. இதே போன்று ஈரான் அணியுடன் இந்தியா ஏ மோதியது. இதில் இரண்டு அணிகளும் தலா 2 புள்ளிகளை பெற்று சமனில் முடிவடைந்தது.
இதே போன்று இந்திய சி அணி ஸ்லோவாக்கியாவுடன் மோதியது. இதில் களமிறங்கிய மற்றொரு தமிழக வீரர் சேதுராமன் தோல்வியை தழுவினார். மகளிர் பிரிவில் இந்திய ஏ அணியில் களமிறங்கிய தமிழக வீராங்கனை வைசாலி கஜகஸ்தான் வீராங்கனையுடன் டிரா செய்ய, மற்ற மூவரும் வெற்றி பெற்றனர்.இதே போன்று நெதர்லாந்து அணியை இந்திய பி அணி வீழ்த்தியது. சுவிடனை எதிர்கொண்ட இந்திய சி அணியும் வென்றது. இதில் தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார்.
செஸ் ஒலிம்பியாட்டில் திடீர் தர்ணா.. ஹாங்காங் வீரர் வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு.. என்ன நடந்தது?