சென்னை: செஸ்சப்பல் மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டிக்கு 16 வயதான தமிழக வீரரும் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
உலக அளவில் 16 சிறந்த வீரர்கள் பங்கேற்றுள்ள இந்த தொடர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இணையம் வாயிலாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் லீக் சுற்றில் உலக சாம்பியன் கார்ல்செனை தோற்கடித்த பிரக்ஞானந்தா, காலிறுதியில் சீன வீரர் வெயியை தோற்கடித்தார்.
இதன் பின்னர் அரையிறுதியில் 29 வயதான நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை பிரக்ஞானந்தா எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 2க்கு2 என்ற கணக்கில் சமனில் முடிந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் டை பிரேக்கர் போட்டி நடைபெற்றது. இதில் 1.5-0.5 என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
இன்று தொடங்கும் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா உலகின் 2ஆம் நிலை வீரரான சீன வீரர் டிங் லிரனை எதிர்கொள்கிறார். இவரும் ஏற்கனவே கார்ல்செனை மோதி வீழ்த்தி இருக்கிறார். இந்த நிலையில் 16 வயதான பிரக்ஞானந்தா தற்போது பிளஸ் 1 படித்து வருகிறார்.
பிளஸ் 1 பொதுத் தேர்வு நடைபெறுவதால் காலை 8.30 மணிக்கு பள்ளி செல்லும் பிரக்ஞானந்தா, இரவு நேரத்தில் நள்ளிரவு 3, 4 மணி வரை ஆன்லைனில் இந்த தொடரில் பங்கேற்கிறார். தூக்கமும் இல்லாமல், கல்வியையும் விடாமல் பிரக்ஞானந்தா 2 பொறுப்பையும் சேர்த்து பார்ப்பது காண்போரை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
2வது முறையாகவா??.. செஸ் உலகமே வியந்த போட்டி.. உலகின் நம்.1 வீரர் கார்ல்சனை அலறவிட்ட பிரக்ஞானந்தா!