இலவச மருத்துவமனை
கொரோனாவைரஸ் பாதிப்புக்கு எதிராக வெறுமனே வாய் வழி பேச்சாக இல்லாமல் அதிரடியாக தனது ஹோட்டல்களையே மருத்துவமனைகளாக ரொனால்டோ மாற்றியிருப்பது ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் கட்டணத்தையும், மருத்துவர்களின் கட்டணத்தையும் தானே ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மடேரியாவில் தங்கியிருக்கிறார்
இத்தாலியின் ஜூவன்டஸ் அணி வீரரான ரொனால்டோ, தற்போது தனது சொந்த ஊரான மெடரியாவில் தங்கியுள்ளார். அங்கு தனது தாயாரைக் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவரால் இத்தாலி திரும்ப முடியவில்லை. காரணம் கொரோனா வைரஸ் காரணமாக விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு.
போர்ச்சுகல் நாட்டிலும் பாதிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு போர்ச்சுகல் நாட்டையும் உலுக்கி வருகிறது. அங்கு இதுவரை 169 பேருக்கு பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இதுவரை உயிரிழப்பு ஏதும் இல்லை. போர்ச்சுகல் அரசு கொரோனா கட்டுப்பாட்டை மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறது. அரசுக்கு ஆதரவாக பல்வேறு துறையினரும் களம் இறங்கியுள்ளனர். மக்களுக்கும் உரிய விழிப்புணர்வு தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
ஹோட்டல்கள் தானம்
அந்த வகையில்தான் ரொனால்டோவின் இந்த சேவை வந்துள்ளது. ரொனால்டோவுக்கு லிஸ்பன் மற்றும் மடேரியா ஆகிய இரு நகரங்களிலும் ஹோட்டல்கள் உள்ளன. சாதாரண ஹோட்டல் முதல் 4 ஸ்டார் ஹோட்டல் வரை இதில் அடக்கமாகும். கொரோனா அறிகுறி உள்ள யார் வேண்டுமானாலும் இங்கு வரலாம். அவர்களுக்கு இங்கு தங்கியுள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவுக்கு எந்த பாதிப்பும் இல்லை
ரொனால்டோ மடேரியாவில் தங்கியிருக்க ஒரு காரணம் உள்ளது. அதாவது ஜுவன்டஸ் அணியைச் சேர்ந்த டேனியல் ருகானி என்ற வீரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்புடைய அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன்படியே ரொனால்டோவும் தனிமைப்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதேசமயம், அவரது தாயார் டோலரஸ் அ வியரா பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் ஆவார்.