செஸ் ஒலிம்பியாட்
நடப்பாண்டிற்கான செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதலில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் போர் காரணமாக இந்தியாவுக்கு மாற்றப்பட்டது. அதிலும் போட்டியை நடத்துவதற்கான உரிமையை தமிழகம் பெற்று, சென்னை மகாபலிபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை செஸ் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரம்மாண்ட ஏற்பாடு
இந்த போட்டியில் கலந்துக்கொள்ள மொத்தம் 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2,000 வீரர்கள் வரை பங்கேற்பார்கள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் 5 வீரர், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 பேர் கொண்ட குழுவாக வருகை தருவார்கள். இதில் இந்தியா தொகுத்து நடத்தும் நாடு என்பதால் 2 குழுக்கள் பங்கு பெறும். இதற்கான பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சின்னம் வெளியீடு
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ மற்றும் சின்னத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வண்ண விளக்குகளால் ஓளிரூட்டப்பட்ட 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான லோகோ அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் 50 நாள் கவுண்ட் டவுன் (Countdown) பொதுமக்களின் பார்வைக்காக தொடங்கி வைக்கப்பட்டது.
விளம்பர பணி
இந்த போட்டிக்கான விளம்பர பணிகளில் தமிழக அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது. அரசு சார்பில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களிடையே செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மேலும் பேருந்துகள், இரயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செஸ் ஒலிம்பியாட் விளம்பரம் செய்யப்படவுள்ளது.