இன்ச்சான்: ஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இன்று நடந்த காம்பவுண்டு பிரிவு பைனலில், இந்திய ஆண்கள் அணி வலிமையான தென் கொரியாவை 227-225 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியுள்ளது.
தென் கொரியாவின் இன்ச்சானில், 17வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. அதில், இன்று நடந்த வில்வித்தை காம்பவுண்டு பிரிவு பைனலில் இந்திய ஆண்கள் அணி தென் கொரியாவை சந்தித்தது. இந்தியா சார்பில் சந்தீப் குமார், அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் அடங்கிய அணி பங்கேற்றது.
தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, முடிவில் 227-225 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றியது.
2வது தங்கம்...
இது ஆசிய போட்டிகளில் இந்தியாவின் 2-வது தங்க பதக்கம் ஆகும்.
வில்வித்தையில் முதல் தங்கம்...
ஆசிய வில்வித்தை போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இது தான் முதன் முறை. இதற்கு முன் 1 வெள்ளி, 3 வெண்கலம் தான் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
காம்பவுண்டு தனிநபர் பிரிவு...
ஆண்கள் காம்பவுண்டு தனி நபர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதேபோல், பெண்கள் காம்பவுண்டு தனி நபர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் திரிஷா தேப் (140-145) என்ரா புள்ளிக் கணக்கில் தென் கொரியாவின் சியோக்கிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த வெண்கலத்துக்கான போட்டியில், தாய்லாந்தின் ஹுவாங்கை 138-134 புள்ளிக்கணக்கில் வென்று வெண்கலம் கைப்பற்றினார்.
பெண்கள் காம்பவுண்டு பிரிவு...
பெண்கள் காம்பவுண்டு பிரிவு வில்வித்தையில், வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் ஈரானை எதிர் கொண்ட பர்வஷா, சுரேகா, திரிஷா தேப் அடங்கிய இந்திய அணி, முடிவில் 224-217 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கலத்தை தட்டிச் சென்றது.