தொடரும் நிகழ்ச்சிகள்
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதனால், விளையாட்டுப் போட்டிகள் பல கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தனியார் வசம் உள்ள WWE, UFC போன்ற ரெஸ்லிங், கலப்பு தற்காப்பு விளையாட்டுக்கள் மட்டும் தங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஒருவருக்கு தொற்று
அதிலும் WWE ரசிகர்கள் இல்லாத காலி அரங்கில் முன்பே போட்டிகளை பதிவு செய்து அதை ஒளிபரப்பி வந்தது. கடந்த ஏப்ரல் 11 அன்று அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளது.
வீரர்கள் விடுப்பு
அப்படி இருந்தும் அந்த நிறுவனம் தங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வந்தது. பல ரெஸ்லிங் வீரர்கள் தங்கள் உடல்நலன் கருதி தாங்களாகவே விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். என்ன வந்தாலும், நிறுத்தமாட்டோம் என அடம் பிடித்து வருகிறது WWE.
நேரலை அனுமதி
இதில் உச்சகட்டமாக தங்கள் அரசியல் செல்வாக்கை வைத்து ப்ளோரிடா மாகாணத்தில் WWE நிகழ்ச்சிகளை நேரலையில் பதிவு செய்து, ஒளிபரப்ப அனுமதி பெற்றுள்ளனர். இதற்காக, ப்ளோரிடா மாகாண கவர்னர் WWE நிகழ்ச்சிகளை அத்தியாவசிய சேவை என அறிவித்தார்.
புதிய கட்டாயம்
ஏற்கனவே, ஐந்த வாரத்திற்கான போட்டிகளை மூன்றே நாளில் பதிவு செய்து அனைவரையும் வீட்டுக்கு பத்திரமாக WWE அனுப்ப உள்ளதாக செய்தி வெளியான நிலையில், நேரலை ஒளிபரப்பு என்றால் அனைத்து வீரர்களும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
போட்டி நடக்க வேண்டும்
அதனால், ரெஸ்லிங் வீரர்களுக்கும், ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. ஆனால், அதை எல்லாம் WWE கண்டு கொள்ளவில்லை. என்ன நடந்தாலும், போட்டிகள் நடக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது.
பொருளாதார வீழ்ச்சி
WWE நிறுவனம் கொரோனா வைரஸை ஒரு பெரிய பாதிப்பு இல்லை என்பது போலவே தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பொருளாதார வீழ்ச்சி நம்மையும் பாதிக்கும் என்பதை உணர்ந்துள்ள WWE தற்போது அதிரடியாக பலரை வேலையை விட்டு அனுப்பி வைத்துள்ளது.
41 பேர் நீக்கம்
31 ஆண்டுகள் தங்களிடம் பணியாற்றிய மேட்ச் ரெப்ரீ மைக் சியோடாவையும் பணி நீக்கம் செய்துள்ளது. இது தவிர கர்ட் ஆங்கிள், ரூசெவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 41 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
லாபம் குறையும்
எனினும், இந்த பணி நீக்கம் WWE வரும் நாட்களில் ரசிகர்கள் இல்லாத அரங்கில் போட்டிகளை நடத்துவதால் தன் லாபம் குறையும் என்பதாலேயே எடுத்த முடிவு போலத் தான் தெரிகிறது. தொடர்ந்து நேரலையில் போட்டிகளை ஒளிபரப்புவதில் WWE உறுதியாக இருப்பதாகவே தெரிகிறது.
பொறுப்பற்ற செயல்பாடு
அமெரிக்காவில் 6 லட்சம் பேருக்கும் மேல் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர். இருந்தாலும், WWE போன்ற பெரு நிறுவனங்கள் அமெரிக்காவில் லாப நோக்கில் செயல்பட்டு வருகின்றன.