தடை இல்லை
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இடையேயும் தங்கு தடையின்றி WWE-இன் முக்கிய வாரந்திர நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது. அதனால், எப்படியும் WWE தன்னிடம் பணிபுரியும் ஊழியர்கள், ரெஸ்லிங் வீரர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
திடீர் பணி நீக்கம்
ஆனால், திடீரென 41 பேரை பணி நீக்கம் செய்தும், ஒப்பந்தத்தை முடித்தும் வீட்டுக்கு அனுப்பி உள்ளது WWE. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ளது. பல தொழில்களும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.
தக்க வைக்க வேண்டும்
உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என அரசாங்கங்கள் மூலம் கூறப்பட்டு வருகிறது. ஆனால், WWE பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையிலும், ஊழியர்களை வெளியேற்றி உள்ளது.
எத்தனை பேர்?
இதில் முக்கிய ரெஸ்லிங் வீரர்களும் அடக்கம். மொத்தம் 22 ரெஸ்லிங் வீரர்களும், 10 தயாரிப்பு நிர்வாகிகளும், 3 பயிற்சியாளர்களும், 6 இதர ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர பலரும், உதவித் தொகை பெறும் வகையில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ரூசெவ் நீக்கம்
ரெஸ்லிங் வீரர் ரூசெவ் நீக்கப்பட்டு இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் சமீபத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் WWE ஊழியர்களுக்கு 20,000 டாலர்கள் நிதி வழங்கி இருந்தார். அவரை நீக்கி உள்ளது WWE.
முக்கிய வீரர்கள்
முன்னாள் ரெஸ்லிங் வீரரும், முன்னணி தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்த கர்ட் ஆங்கிளும் நீக்கப்பட்டுள்ளார். சாக் ரைடர், எரிக் ரோவன், லுக் காலோவ்ஸ், கார்ல் ஆண்டர்சன், சாரா லோகன், ஈஸி3, ட்ரேக் மேவரிக், கர்ட் ஹாகின்ஸ், மைக், மரியா கானேளிஸ், ஹீத் ஸ்லேட்டர், நோ வே ஜோஸ், எரிக் யங், லியோ ரஷ், பிரிமோ, எபிகோ உள்ளிட்ட பல பிரபல ரெஸ்லிங் வீரர்களும் நீக்கப்பட்டுள்ளனர்.
பலரும் அதிர்ச்சி
இவர்கள் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த பின் WWE-க்கு திரும்புவார்களா? என்ற கேள்வி உள்ளது. பல ரெஸ்லிங் வீரர்கள் தங்கள் பணி நீக்கத்தை எதிர்பாராததால் அதிர்ச்சியில் உள்ளனர். ரசிகர்கள் பலரும் கூட அதிர்ச்சியில் உள்ளனர்.