கவலையில் விளையாட்டு உலகம்
இதற்கிடையே, விளையாட்டு உலகம் வேறு ஒரு கணக்கில் கவலையுடன் களம் இறங்கியுள்ளது. மிகப் பெரிய அளவில் விளையாட்டுத்துறைக்கு இந்த முறை அடி கிடைத்துள்ளது என்று சொல்கிறார்கள். கால்பந்துப் போட்டிகளைப் பொறுத்தவரை லிவர்பூல் அணி மிகப் பெரிய நஷ்டத்தைச் சந்தித்துள்ளதாம். இந்த ஆண்டு பிரீமியர் லீக் சீசனில் இந்த அணி மொத்தம் 29 போட்டிகளில் விளையாடி 27 போட்டிகளை வென்றுள்ளது. கோப்பையை நோக்கி வேகமாக சென்ற நிலையில் தற்போது போட்டிகள் நிறுத்தப்பட்டு விட்டதால் லிவர்பூல் அணி பெரும் இழப்பை சந்தித்துள்ளது.
கவலையில் லிவர்பூல்
ஏப்ரல் 3ம் தேதி வரை பிரீமியர் லீக் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டு விட்டன.இங்கிலாந்தில் நிலைமை மேலும் மோசமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. விரைவில் இயல்பு நிலை திரும்ப வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். இது லிவர்பூல் அணியை மேலும் கவலை கொள்ளச் செய்துள்ளது. எப்போது இயல்பு நிலை திரும்பும், மீண்டும் போட்டிகள் தொடங்கும். கோப்பையை வெல்லலாம் என அவர்கள் காத்துள்ளனர்.
அதிக பாதிப்பில் தோனி
அப்படியே இந்தியா பக்கம் வந்தால் தோனிக்குத்தான் அதிக பாதிப்பு. காரணம், நீண்டகாலமாக அவர் சர்வதசே போட்டிகளில் விளையாடாமல் உள்ளார். அவருக்கு நல்ல கம் பேக்காக ஐபிஎல் அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டித் தொடர் தள்ளிப் போடப்பட்டு விட்டதால் அது தோனிக்கு இழப்புதான். மீண்டும் நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற அபாயகரமான கேள்வியும் நிலவுகிறது. எனவே தோனிக்கு இது நிச்சயம் ஏமாற்றமே.
ரபேல் நடாலுக்கு ஏமாற்றம்
மறுபக்கம் டென்னிஸ் போட்டிகளில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தள்ளிப் போடப்பட்டு விட்டது. அதை செப்டம்பருக்குக் கொண்டு போய் விட்டனர். விம்பிள்டன் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சொல்கிறார்கள். அமெரிக்க ஓபன் போட்டிகள் குறித்து தெளிவு இல்லை. அதேசமயம், இந்த கொரோனா குழப்பத்தால் ரபேல் நடால்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளாராம். பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 12 முறை வென்ற சாதனையாளர் அவர். அவருக்கு இந்த தள்ளிவைப்பு நிச்சயம் ஏமாற்றம்தான்.
தள்ளிப் போகுமா ஒலிம்பிக் போட்டிகள்
அதேபோல ஒலிம்பிக் போட்டியும் தள்ளிப் போகும் என்று சொல்லப்படுகிறது. இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்ற போதிலும் போட்டியைத் தள்ளிப் போடாமல் தவிர்க்கவும் முடியாது. காரணம் உலக நாடுகள் பலவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் போட்டியை நடத்துவது கடினமானதாகவே இருக்கும். ஒரு வேளை போட்டி தள்ளிப் போடப்பட்டால் இதற்காக பயிற்சி எடுத்து வரும் அனைத்து நாடுகளுக்குமே அது நஷ்டம்தான்.
வடிவேலு சொல்வதைப் போல.. இப்படியே போய்ட்டிருந்தா எப்படிப்பா.. இதுக்கு என்டே கிடையாதா என்றுதான் கொரோனாவைப் பார்த்து கோபமாக கேட்கத் தோன்றுகிறது.