விளையாட்டு உலகம் குறித்து பிடி உஷா
தங்க மங்கை, பையோலி எக்ஸ்பிரஸ் என்ற செல்லப் பெயர்களால் அழைக்கப்படுபவர் பிடி உஷா. கடந்த 1984ல் நடைபெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி இறுதிவரை சென்றவர் இவர். 400 மீடடர் ஓட்டத்தில் 55.42 விநாடிகளில் ஓடி சாதனை புரிந்தவர். சர்வதேச அளவில் பல்வேறு கோப்பைகளையும் பதக்கங்களையும் பெற்று தனது வீட்டை நிரப்பியுள்ளவர்.
இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகம்
கடந்த 1983ல் அர்ஜூனா விருதையும் 1985ல் பத்மஸ்ரீ விருதையும் பெற்று பெருமை சேர்த்துள்ளவர். 2024 அல்லது 2028ல் நாட்டுக்காக ஒலிம்பிக்கில் தடகளத்தில் பதக்கத்தை வெல்வதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார் பிடி உஷா. இதற்கான உத்வேகம் தன்னுடைய சாதனை மூலம் இளம் வீராங்கனைகளுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வருத்தம் இல்லை
கடந்த 1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் மயிரிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார் பிடி உஷா. ஆனால் அதுகுறித்து தான் வருத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடுவதற்கு லட்சக்கணக்கில் வீரர்கள் காத்திருக்கின்றனர். லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்க்கின்றனர். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டும் எனக்கு அந்த இளம் வயதில் கிடைத்தது, இது அதிகளவில் பெருமையை தந்தது என்றார் அவர்.
கடுமையான உழைப்பு
தற்காலத்தில் 50க்கு 50 வெற்றி சதவிகிதமே தடகளத்தில் காணப்படுகிறது. கடுமையாக உழைப்பவர்கள் வெற்றி காண்பார்கள். ஏஎப்ஐ மற்றும் சாய் விளையாட்டுத் துறையில் பல்வேறு முயற்சிகளை புகுத்தி வருகின்றன. 1998 முதல் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான நிதி செலவிடப்பட்டுள்ளது. ஆயினும் தடகளத்தில் பதக்கத்தின் அருகில்கூட செல்ல முடியவில்லை என்றும் பிடி உஷா கூறினார்.
தடைகள் காணப்படலாம்
கொரோனா வைரஸ் தொற்றை கடந்தும் விளையாட்டு இருக்கும். காலி மைதானங்கள் போன்ற சில தடைகள் இருக்கலாம். வீரர்கள், பயிற்சியாளர்கள் தோழமையுடன் நெருக்கமாக பழக முடியாது என்ற குறை மட்டும் காணப்படும். ஆனாலும் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் விளையாட்டு மட்டும் எப்போதும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.