54 போட்டியாளர்கள்
இதில் 163 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிக்காட்டி வருகின்றனர். இதில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கொண்ட அணி பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்வளவு அதிக வீரர்களை கொண்ட இந்திய அணி கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். தொடக்க விழா நிகழ்ச்சியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். முதலில், தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் அவர் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் டெக்சந்த் தேசிய கொடியை ஏந்திச் சென்றார்.
2-வது இடம்
இந்நிலையில், பாரா ஒலிம்பிக்கில் ஆறாவது நாளான நேற்று (ஆக.29) தான், இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா படேல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார். ஆனால், இறுதிப் போட்டியில் சீனாவின் உலகின் நம்பர்.1 வீராங்கனை ஸோ யிங்-குடன் பவினா படேல் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 7-11, 5-11, 6-11 என்ற நேர் செட் கணக்கில் பவினா தோல்வி அடைந்தார். இதனால், இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கமே கிடைத்தது. எனினும், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கம் இதுதான். இதன் பிறகு, நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (டி47) போட்டியில், இந்திய வீரர் நிஷாத் குமார் 2-வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். நிஷாத் குமார் 2.06 மீட்டர் உயரம் தாண்டினார். அமெரிக்க வீரர் டவுன்சென்ட் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். மற்றொரு அமெரிக்க வீரர் வைஸ் 2.06 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் ராம் பால் 1.94 மீட்டர் உயரம் தாண்டி 5-வது இடம் பிடித்தார்.
முதல் போட்டியில் மெடல்
இதையடுத்து, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் வினோத் குமார் இறுதிச்சுற்றில் 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இப்போட்டியில், போலந்து வீரர் கோஸ்விச் (20.02 மீட்டர்) தங்கப்பதக்கமும், குரோஷிய வீரர் வெலிமிர் சாண்டர் (19.98 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். எனினும், வட்டு எறிதல் போட்டியின் இறுதி முடிவு, வகைப்பாடு கண்காணிப்பு காரணமாக தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, போட்டிக்கான வெற்றி விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், பாரா ஒலிம்பிக் போட்டியில், மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா இன்று தங்கம் வென்று சாதித்துள்ளார். பாராலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையை 19 வயதான அவனி லெகாரா பெற்றார். அவனி 249.6 புள்ளிகளுடன் உலக சாதனையை சமன் செய்தார். இதுபோல் வட்டு எறிதலில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளி வென்றார். ஒரே நாளில் இந்தியாவுக்கு இன்று 2 பதக்கம் கிடைத்துள்ளது. சீனாவின் கியூப்பிங் ஜாங் 248.9 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும், உக்ரைனின் இரினா ஷ்செட்னிக் வெண்கலத்தையும் வென்றனர். அதுமட்டுமின்றி, ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் யோகேஷ் கத்துனியா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பங்கேற்ற முதல் பாராலிம்பிக் போட்டியிலேயே பதக்கம் வென்று அசத்தி உள்ளார் யோகேஷ் கத்துனியா.
சுந்தர் சிங்
இதையடுத்து, இன்று ஈட்டி எறிதல் போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியாவின் லெஜண்ட் வீரர் தேவேந்திர ஜஜாரியா 64.35 தூரம் வீசி வெள்ளிப் பதக்கமும், மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் 64.01 தூரம் வீசி வெண்கலமும் வென்றுள்ளனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. ஜஜாரியா தனது முதல் இரண்டு த்ரோவில் 60 மீட்டர் எனும் அளவில் சுமாராகவே வீசினார். ஆனால், அவர் தனது மூன்றாவது முயற்சியில் 64.35 மீ வீசி அசரவைத்தார். இதுதான் அவரது பதக்கத்தை உறுதி செய்தது. சுந்தரும் மெதுவாவே வீசத் தொடங்கினார், ஆனால் தனது ஐந்தாவது முயற்சியில் 64 மீ தாண்டி வீசினார். இதன் காரணமாக வெண்கலப்பதக்கம் உறுதியானது. இந்த இறுதிப் போட்டியில் மற்றொரு இந்திய ஈட்டி எறிதல் வீரர் அஜீத் சிங் 8 வது இடத்தைப் பிடித்தார்.