தனுஷ்
நடிகர் தனுஷை, தங்களது அணியின் பிராண்ட் அம்பாசடராக சென்னையின் எப்.சி கால்பந்து அணி நியமித்துள்ளது. தமிழகத்தில் சென்னை அணிக்காக விளம்பரத் தூதராக தனுஷ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கு வருவார்
இதுகுறித்து சென்னையின் எப்.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், தனுஷ் கால்பந்து போட்டியையும், லீக்கையும் பிரமோட் செய்வார். தமிழகம் முழுவதும் இந்த விளையாட்டு மக்களிடையே சென்று சேர உழைப்பார். தீவிர கால்பந்து ரசிகரான தனுஷ், சென்னை போட்டிகளின்போது அணியின் சீருடை அணிந்து ஸ்டேடியத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செஞ்சுருவோம்...
இதுகுறித்து தனுஷ் கூறுகையில், இந்தியக் கால்பந்துக்கு மறுமலர்ச்சியாக அமைந்துள்ளது ஐஎஸ்எல். தரமான கால்பந்துப் போட்டிகளை ரசிகர்களுக்கு அது வழங்கும். இந்தப் போட்டிக்காக காத்திருக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்.
தமிழகம் முழுவதும் பிரபலப்படுத்துவேன்
ஒரு தீவிர கால்பந்து ரசிகனான எனக்கு இந்த பிராண்ட்அம்பாசடர் வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது சந்தோஷம் தருகிறது. பெருமையாக உள்ளது. எனது மொழியில், எனது மாநிலத்தில் இந்தக் கால்பந்துப் போட்டியை பிரபலப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
அக்டோபர் 3 முதல்
இந்த ஆண்டுத் தொடரில், அக்டோபர் 3ம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது. அப்போது நடப்புச் சாம்பியன் ஆட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், சென்னையின் எப்.சி அணியும் மோதவுள்ளன.