தோஹா : கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர் ஜாபிர் மதரி பில்யாலில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பல்வேறு தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 400 மீட்டர் தடை ஓட்டம் நடைபெற்றது.
இந்தியா சார்பாக ஜாபிர் மதரி பில்யாலில் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தருண் அய்யாசாமி பங்கேற்றனர். இவர்கள் இருவரில் ஜாபிர் மதரி பில்யாலில் தான் இடம் பெற்ற ஹீட் 1 ஆடவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்தப் தடை ஓட்டப் பந்தயத்தில் நார்வேயின் கார்ஸ்டன் வார்ஹோம் 49.27 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி முதல் இடமும், அயர்லாந்தின் தாமஸ் வார் 49.41 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி இரண்டாம் இடமும் பிடித்தனர்.
ஜாபிர் மதரி பில்யாலில் 49.62 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி மூன்றாம் இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் தருண் அய்யாசாமி தடை ஓட்டத்தின் கடைசி தடையை தாண்டிய போது தடுமாறினார். அதனால் ஏற்பட்ட சிறிய நேர இழப்பின் காரணமாக போட்டி தூரத்தை 50.55 வினாடிகளில் எட்டி அரையிறுதி செல்லும் வாய்ப்பை நழுவ விட்டார்.
அவரால் 27வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. இந்திய அளவில் தருண் அய்யாசாமி தடை ஓட்டத்தில் சாதனை புரிந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், சிறிய தடுமாற்றம் காரணமாக முக்கியமான உலக சாம்பியன்ஷிப் தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளார்.
உயரம் தாண்டுதலில் ஸ்ரீஷங்கர் தன் சிறந்த பதிவாக 7.62 மீட்டர் உயரம் மட்டுமே தாண்டி இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார். கடந்த மாதம் தான் இவர் 8 மீட்டர் உயரம் தாண்டி தன் சிறந்த பதிவை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.