முழங்கால் மூட்டில் காயம்
2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தவர் தீபா கர்மகர். அதன் பின்னர் 2017ல் அவருக்கு முழங்கால் மூட்டில் காயம் ஏற்பட்டது. இதற்காக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார். அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். 2018ல் மீண்டும் அவர் போட்டிகளுக்குத் திரும்பினார். ஆனால் அவரது முழங்கால் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. மீண்டும் வலியால் அவதிப்பட்டார்.
தொடரிலிருந்து வெளியேற்றம்
தோஹா உலகக் கோப்பை போட்டித் தொடரிலிருந்தும் தீபா கர்மகர் காயம் காரணமாக வெளியேற நேரிட்டது. அதேபோல கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த உலக ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியிலும் கூட அவர் கலந்து கொள்ள முடியாமல் போனது. உலக அளவில் 8 உலகக் கோப்பைப் போட்டிகள் உள்ளன. அதில் 6 போட்டிகளில் அவர் பங்கேற்க முடியவில்லை. 2 போட்டிகள் இந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அவையும் கூட ஒத்திப் போடப்பட்டு விட்டன.
தீபா ஹாப்பி அண்ணாச்சி!
இந்த நிலையில்தான் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போயுள்ளதை சந்தோஷமாக பார்க்கிறார் தீபா. அதற்குள் நான் மீண்டு விடுவேன். சரியாகி விடுவேன். இது எனக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது என்று துள்ளாமல் குதிக்கிறார் தீபா. நிச்சயம் நான் பார்முக்குத் திரும்ப இது உதவும். நம்பிக்கையோடு இருக்கிறேன். ஒலிம்பிக்குக்குத் தகுதி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறுகிறார் தீபா கர்மகர்.
முதல் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை தீபா என்பது நினைவிருக்கலாம். துருக்கியில் 2018ல் நடந்த ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலக சேலஞ்ச் கப் போட்டியில் அவர் தங்கப் பதக்கமும் வென்றார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக் குறித்து அவருக்கு பெரும் நம்பிக்கை பிறந்துள்ளது. தீபா கர்மகர் டோக்கியோவில் சாதிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.