திரிபுரா: இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டிக்குள் திபா கர்மாகர் நுழைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இரவு முழுவதும் தன்னால் தூங்க முடியவில்லை'' என்றும் அவரது தந்தை துலால் கர்மாகர் தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்து திபா கர்மாகருக்கு 23 வயதாகிறது. நாளைய தினம் அவரது பிறந்தநாளாகும். இந்த பிறந்தநாள் அவருக்கு மறக்க முடியாத மகிழ்ச்சிகரமான பிறந்தநாளாக அமைந்துள்ளது.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் போட்டியிட தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை ஏற்கனவே படைத்துள்ள திபா கர்மாகர், தற்போது ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இரு முயற்சிகளின் முடிவில் 14.850 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ஆகஸ்டு 14ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
ஜிம்னாஸ்டிக் போட்டியின் பங்கேற்ற இந்தியாவின் திபா கர்மாகர் நான்கு வகையான ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகளை பெற்று 27வது இடத்தை பிடித்துள்ளார்.
வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்தார்.அன் ஈவன் பார் பிரிவில் 11.666 புள்ளிகள், பேலண்ஸ் பீம் பிரிவில் 12.866 புள்ளிகள், ஃப்ளோர் பிரிவில் 12.033 புள்ளிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் 14ம் தேதி நடைபெறும் ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் வால்ட் போட்டியில் பங்கெற்ற முதல் நபர் என்ற பெருமையை திபா கர்மாகர் பெற்றார். தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே அவர் இத்தகைய சாதனையை நிகழ்த்தினார்.
இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டிக்குள் திபா கர்மாகர் நுழைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இரவு முழுவதும் தன்னால் தூங்க முடியவில்லை'' என்றும் அவரது தந்தை துலால் கர்மாகர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நாளை திபாவின் பிறந்த நாள் வருகிறது. அவர் மெடல் வென்றால், இதுதான் அவருக்கு மிகப்பெரிய பரிசாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.