ஜஸ்ட் மிஸ்...
ஒலிம்பிக்குக்குத் தகுதி பெற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனையான தீபா நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 4வது இடத்தைப் பிடித்தார். அவருக்கு மொத்தம் 15.066 புள்ளிகள் கிடைத்தன. இது 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்ற சுவிட்சர்லாந்தின் குலியா ஸ்டெய்ன்கிரபரை விட 0.15 புள்ளிகள் மட்டுமே குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்குத் தங்கம்...
இப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு 3வது தங்கப் பதக்கமாகும் இது. 2வது இடத்தை நடப்பு உலகச் சாம்பியன் ரஷ்யாவின் மரியா பெசகா பெற்றார்.
சிறந்த பெர்பார்மென்ஸ்...
தீபாவுக்குப் பதக்கம் கிடைக்காவிட்டாலும் கூட உலகத் தரமான ஒரு ஜிம்னாஸ்ட்டை உலகுக்கு கொடுத்த பெருமையை இந்தியா பெற்று விட்டது. உலகின் முன்னணி வீராங்கனைகளுக்கு வெகு அருகில் இந்தியா வந்து விட்டது தீபா மூலமாக நமக்குக் கிடைத்த பெருமையாகும்.
தந்தை பெருமை...
தீபா 4வது இடம் பிடித்தது பெருமை தருவதாக அவரது தந்தை துலால் கர்மகர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எனது மகளுக்காகப் பெருமைப்படுகிறேன். பதக்கம் கிடைக்காதது எனக்கு வருத்தம் தரவில்லை. இதுதான் அவரது முதல் ஒலிம்பிக்ஸ். அடுத்த ஒலிம்பிக்ஸ் ஜப்பானில் நடைபெறும்போது, நிச்சயம் எனது மகள் நாட்டுக்காக பதக்கம் பெற்று வருவார்.
தேசத்தின் மகள்...
எனது மகள் இனியும் திரிபுராவின் மகள் அல்ல. அவர் தேசத்தின் மகளாக உயர்ந்துள்ளார் தீபாவின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருந்தது. அவர் கடுமையாக உழைத்தார். அடுத்த ஒலிம்பிக்கில் அவர் பதக்கம் வாங்குவது உறுதி. அதற்காக அவர் கடுமையாக உழைப்பார்" என்று அவரது தந்தை கூறினார்.