சென்னை: காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்ற ஸ்குவாஷ் வீராங்கனைகளான தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பலிகல் மற்றும் ஜோஷ்னா சின்னப்பா உள்ளிட்டோர் நேற்று இரவு சென்னை வந்து சேர்ந்தனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் போட்டிகள் நடந்தன. இதில் 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என, 66 பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற வீரர்கள், வீராங்கனைகள் நாடு திரும்பி வருகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தீபிகா பலிகல், ஜோஷ்னா சின்னப்பா, ஸ்குவாஷ் மகளிர் இரட்டையரில் வெள்ளி வென்றனர். சவுரவ் கோஷ் உடன் சேர்ந்து, கலப்பு இரட்டையரில் தீபிகா பலிகல் வெள்ளி வென்றார். இருவரும் நேற்று இரவு சென்னைக்கு திரும்பினர். விமான நிலையத்தில் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணி வீரரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனுமான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக்கின் மனைவிதான் தீபிகா பலிகல். 2014ல் நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மகளிர் இரட்டையரில் தீபிகா மற்றும் ஜோஷ்னா, மகளிர் இரட்டையரில் தங்கம் வென்றனர்.
நான்கு ஆண்டுகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மீண்டும் தங்கத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் சென்றோம். நல்லவேளை வெறும் கையோடு திரும்பவில்லை என்று திருப்தி அடைகிறோம். இருந்தாலும் காமன்வெல்த்தில் தவறவிட்ட தங்கத்தை ஆகஸ்டில் நடக்க உள்ள ஆசியக் கோப்பையில் பிடிப்போம் என்று இருவரும் நம்பிக்கையுடன் கூறியுள்ளனர்.
காமன்வெல்த்தில் இரண்டு பதக்கங்கள் வென்ற தீபிகாவுக்கு, ரூ.60 லட்சம், ஜோஷ்னா சின்னப்பா மற்றும் சவுரவ் கோஷுக்கு தலா ரூ.30 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இவர்களைத் தவிர காமன்வெல்த்தில் சிறப்பாக செயல்பட்ட டேபிள் டென்னிஸில் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்ற சரத் கமல் மற்றும் சத்யன் ஞானசேகரன் உள்ளிட்டோருக்கும் ரொக்ப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.