புதிய வரலாறு
இந்தியாவைப் பொறுத்தவரை, இதுவரை 2 மெடல்கள் வெல்லப்பட்டுள்ளன. பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் கைப்பற்ற, பேட்மிண்டன் வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றுக் கொடுத்தார். அதேசமயம், குத்துச்சண்டையில் லோவ்லினா ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ள நிலையில், அவர் அரையிறுதியிப் போட்டிக்காக காத்திருக்கிறார். இவற்றைத்தவிர இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, பெண்கள் ஹாக்கி அணி ஆகியவை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ள. இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில், இதுவரை இந்தியாவுக்காக பதக்கங்களை உறுதி செய்திருப்பது பெண்கள் மட்டுமே.
நேரடியாக ஃபைனலுக்கு
கடந்த ஜுலை.31ம் தேதி டோக்கியோவில் நடைபெற்ற பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில், குரூப் 'பி' யில், இடம் பெற்றிருந்த கமல்ப்ரீத் கவுர், சராசரியாக 64 மீட்டர் தூரம் வீசி, தனது பிரிவின் பட்டியலில் இரண்டாவது வீராங்கனையாக இடம் பிடித்தார். அதுமட்டுமின்றி, இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தினார். அவர் அதிகபட்சம் 64 மீட்டர் தூரம் வீசினார். இது 'ஏ' பிரிவில் முதலிடம் பிடித்த குரோஷிய வீராங்கனை எடுத்த புள்ளிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்பிரீத் கவுர் தன்னுடைய முதல் சுற்றில் 60.29 மீட்டர் தூரம் வீசினார். பின்னர் இரண்டாவது சுற்றில் அப்படியே கியரை மாற்றிய கமல்ப்ரீத், 63.97 மீட்டர் வீசி மிரள வைத்தார். கடைசி மற்றும் மூன்றாவது வாய்ப்பில் இன்னும் ஒருபடி மேலே சென்று 64.00 மீட்டர் தூரம் வீசி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று வியக்க வைத்தார். குரூப் A மற்றும் குரூப் B-யில் மொத்தம் கலந்து கொண்ட 31 வீராங்கனைகளில், 64 மீட்டர் தூரம் வீசிய, இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதிப் பெற்ற இரண்டே இரண்டு வீராங்கனைகளில் கமல்ப்ரீத் கவுரும் ஒருவர். ரியோ & லண்டன் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற, குரோஷியாவின் சாண்ட்ரா பெர்கோவிச், 63.75 மீ மட்டுமே வீசியுள்ளார். இது, கமல்ப்ரீத் வீசிய தூரத்தை குறைவானதாகும்.
முதலிடம்
இவர் இதே வேகத்தில் விளையாடினால், இறுதிப் போட்டியில் இந்தியா நிச்சயம் மெடல் அடிப்பது உறுதி என்று விளையாட்டு ஆர்வலர்கள் தெரிவித்திருந்தனர். உண்மையில் கமல்ப்ரீத் சிறந்த செயல்பாடு இதுவல்ல. கவுர் இரண்டு முறை தேசிய சாதனையை முறியடித்துள்ளார். முதலில் ஃபெடரேஷன் கோப்பையில் 65 மீ தூரம் தாண்டிய முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையைப் பெற்றார். பின்னர் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் -4 இல் அவர் 66.59 மீட்டர் தூரம் வீசி சாதனைப் படைத்தார். இவ்வளவு எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இன்று இறுதிப் போட்டியில் களமிறங்கினார் கமல்ப்ரீத் கவுர். இதில், அவர் தனது முதல் முயற்சியில் 61.62 மீட்டர் தூரம் வீசினார். இதனால் அவர் முதல் சுற்றில் ஆறாவது இடம் பிடித்தார். அமெரிக்காவின் அல்மான் 68.98 மீட்டர் தூரம் வீசி வியக்க வைத்து முதலிடம் பிடித்தார். கியூபாவின் யெய்மே பெரஸ் 65.72 மீட்டர் வீசி இரண்டாம் இடம் பிடித்தார். அடுத்து இரண்டாவது சுற்றில் கமல்ப்ரீத் கவுர் ஃபவுல் வீசினார். இதனால் அவர் 7வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். ஆனால், அப்போது மழை கடுமையாக பெய்யத் தொடங்கிவிட்டது. இதனால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதனால், வட்டு எறிதல் மட்டுமின்றி, போல் வால்ட் விளையாட்டும் மழையால் நிறுத்தப்பட்டது.
கடைசி வாய்ப்பு
மழைக்கு முன்பாக நடந்த போட்டியில், கமல்ப்ரீத் ஆட்டம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. முதல் சுற்றுப் போட்டியில் வீசிய தூரத்தைக் கூட அவர் வீசவில்லை. இரண்டாவது சுற்றின் முடிவின் படி, அமெரிக்காவின் வலரி அல்மன் 68.98 மீ., கியூபாவின் யைம் பெரெஸ் (65.72 மீ) மற்றும் ஜெர்மனியின் கிறிஸ்டின் புடென்ஸ் (65.34 மீ) ஆகியோருடன் சிறந்த முதல் மூன்று இடங்களில் இருந்தனர். கமல்பிரீத் கவுர் (61.62 மீ) வீசி 7 வது இடத்தில் இருந்தார். பிறகு, கடைசி வாய்ப்பில் 63.70 மீட்டர் தூரம் வீசினார். இதனால் அவருக்கு ஆறாவது இடம் கிடைத்தது. எனினும், அவர் வெற்றிக்கு இது போதுமானதாக அமையவில்லை. அவர் இறுதியில் 6வது இடமே பிடித்தார்.
வெள்ளி
அமெரிக்காவின் வலரி அல்மன் 68.98 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார். ஜெர்மனியின் கிறிஸ்டின் புடென்ஸ் 66.86 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கமும், கியூபாவின் யெய்மி பெரஸ் 65.72 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கம் வென்றனர். 63.70 மீட்டர் தூரம் வீசிய கமல்ப்ரீத் கவுர் தனது முதல் ஒலிம்பிக்கில் 6வது இடம் பிடித்து நிறைவு செய்தார்.
வெகுளியான தந்தை
முன்னதாக, கடந்த 31ம் தேதி மகள் கமல்ப்ரீத் விளையாடுவதை பார்க்காமல், தனது விவசாய பணியில் ஈடுபட்ட அவரது தந்தை குல்தீப் சிங் சமூக தளங்களில் வைரலானார். இதுகுறித்து அவர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில், "போட்டி தொடங்கும் நேரம் பற்றி நேற்று கமல் என்னிடம் கூறினார். நான் போட்டிக்காக காத்திருந்தேன். ஆனால் டிவியில் வேறு எதையோ காட்டினார்கள். எனது பண்ணையில் எனக்கு சில வேலைகள் இருந்ததால் நான் அதிகம் காத்திருக்கவில்லை. ஹைலைட்ஸ் பார்த்தேன் "நான் எனது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போதுதான், எனக்கு தொலைபேசியில் அழைப்புகள் வர ஆரம்பித்தன. பிறகு உடனே என் வீட்டிற்கு விரைந்து, பின்னர் நான் மீண்டும் போட்டியை ஒளிபரப்பிய போது அதனை பார்த்தேன்" என்று கூறியிருந்தார். பஞ்சாபின் ஸ்ரீ முக்த்சர் சாஹிபில் உள்ள பாதல் கிராமத்தைச் சேர்ந்த கமல்பிரீத், டோக்கியோவில் மிகச்சிறப்பாக செயல்பட்டு தங்கப்பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்திருந்தார்
ஆசியாவில் நம்பர்.1
எனினும், எதிர்பார்த்த அளவு கமல்ப்ரீத் செயல்பட முடியவில்லை. இருந்தாலும், இந்த முதல் ஒலிம்பிக் போட்டியில், பெரும் வீராங்கனைகளுடன் மோதி 6வது இடம் பிடித்தது உண்மையில் பாராட்டத்தக்க சாதனை எனலாம். வட்டு எறிதலில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய இரண்டு ஆசிய வீராங்கனைகளில் கமல்ப்ரீத்தம் ஒருவர். மற்றொரு வீராங்கனை சீனாவைச் சேர்ந்தவர். ஆனால், அவரால் இறுதிப் போட்டியில் 10வது இடமே பிடிக்க முடிந்தது. அப்படியெனில், ஆசிய அளவில், இன்றைய தேதிக்கு கமல்ப்ரீத் கவுர் தான் நம்பர்.1 என்றால் அது மிகையாகாது. விடுங்க.. அடுத்த ஒலிம்பிக்கில் பார்த்துக்கலாம்!