காரை விற்கப் போகிறேன்
அவர் சமீபத்தில் தனக்கு பரிசாக கிடைத்த பிஎம்டபுள்யூ காரை விற்கப் போவதாகவும், அந்த காரை தன்னால் பராமரிக்க முடியவில்லை என்றும் கூறினார். மேலும், அந்த காரை விற்ற பணத்தை தான் பயிற்சி செலவுக்காக பயன்படுத்த உள்ளதாகவும் கூறி இருந்தார்.
பயிற்சிக்கு பணம் தேவை
2020 டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தயார் ஆக அவருக்கு ஏற்கனவே ஒடிசா அரசு பெரிய தொகையை அளித்து இருந்தது. எனினும், ஒலிம்பிக் போட்டி 2021க்கு தள்ளி வைக்கப்பட்டதால் அது வரை பயிற்சிக்கு பணம் தேவைப்படுகிறது எனவும் கூறி இருந்தார் டுட்டி சந்த்.
விளக்கமாக இல்லை
ஆனால், அவர் முதலில் போட்ட பேஸ்புக் பதிவில் இத்தனை விளக்கமாக இல்லை. அப்போது பலரும் டுட்டி சந்த் பணம் வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார் என கூறி இருந்தனர். சிலர் ஒடிசா அரசு அவருக்கு உதவ வேண்டும் எனவும் கூறி இருந்தனர்.
ஒடிசா அரசு விளக்கம்
அதனால், அந்த பதிவை அவர் நீக்கி இருந்தார். அதன் பின்னர் இது குறித்து விளக்கம் அளித்து வந்தார். ஒடிசா அரசு தன் சார்பாக விளக்கம் அளித்தது. பலரும் சமூக வலைதளங்கள் மற்றும் நேரில் டுட்டி சந்த்துக்கு உதவி செய்வது குறித்து கேட்டு வருவதாக கூறி அவருக்காக செலவு செய்த நிதி குறித்த பட்டியலை வெளியிட்டது.
பயிற்சிக்கு உதவி
2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முடிவில் அவரது வெற்றிக்காக அளிக்கப்பட்ட 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை, 2015 முதல் 2019 வரை பயிற்சி மற்றும் செலவுகளுக்காக வழங்கப்பட்ட 30 லட்சம் ரூபாய், டோக்கியோ ஒலிம்பிக் தொடருக்கு தயார் ஆக இரண்டு முறையாக அளிக்கப்பட்ட 50 லட்சம் ரூபாய் உள்ளிட்டவை பற்றி இடம் பெற்றுள்ளது.
அரசு வேலை
மேலும், ஒடிசா மைனிங் கார்பரேஷன் என்ற அரசு நிறுவனத்தில் அவர் குரூப் ஏ அதிகாரியாக பணி அமர்த்தப்பட்டு இருப்பதாகவும், அவர் பணிக்கே வர வேண்டாம் எனவும், அதற்கு அவருக்கு சம்பளமாக மாதம் ரூபாய் 84,604 வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
4.09 கோடி
மேலும், ஒடிசா மைனிங் கார்பரேஷன் அவருக்கு பயிற்சிக்காக 29 லட்சம் அளித்துள்ளதாகவும், கடந்த 2015 முதல் மொத்தமாக அவருக்கு அரசு 4.09 கோடி அளவுக்கு நிதி அளித்துள்ளதாக விளக்கம் அளித்து உள்ளது. இந்த விளக்கத்தை கண்டு தான் கோபம் அடைந்துள்ளார் டுட்டி சந்த்.
நீக்கி விட்டேன்
இது பற்றி டுட்டி சந்த் கூறி உள்ளதாவது : நான் பிஎம்டபுள்யூ காரை விற்கப் போவதாக பகிர்ந்த பதிவில் எங்கேயும் எனக்கு பயிற்சி செய்ய நிதி வேண்டும் என கூறவில்லை. சர்ச்சை எழுந்ததால் அந்த பதிவையும் அன்று இரவே நீக்கி விட்டேன்.
ஏன் குறி வைக்க வேண்டும்?
ஒடிசா அரசு எனக்கு மட்டும் உதவவில்லை. இன்னும் பலர் உள்ளனர், அவர்களுக்கு அளிக்கும் உதவிகளை வெளியிடவில்லை. ஆனால், என்னை மட்டும் ஏன் குறி வைக்க வேண்டும். நான் மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கிறேன். உலகில் அல்லது இந்தியாவில் ஒரு வீரருக்கு செலவிடப்படும் தொகையை யாரும் ஊடகங்களில் வெளியிட்டது கிடையாது.
ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?
என்னை மட்டும் ஏன் இந்த மாநிலத்தில் அவமானப்படுத்துகிறீர்கள்? அந்த ஊடகங்களில் வந்த விளக்கத்துக்கு பின் அனைவரும் டுட்டி நிறைய பணம் வைத்துக் கொண்டு பொய் சொல்கிறார் என கூறுகிறார்கள். என் சுய மரியாதை பாதிக்கப்பட்டுள்ளது என ஒடிசா அரசு மீதே பாய்ந்துள்ளார் டுட்டி சந்த்.