அது என்ன ஈ-ஸ்போர்ட்ஸ்?
ஈ-ஸ்போர்ட்ஸ் என்றால் என்ன? கணினி, ஸ்மார்ட்போன் அல்லது பிளே-ஸ்டேஷன், நின்டென்டோ போன்ற வீடியோ கேம் விளையாட்டுக்கென உள்ள உபகரணங்கள் மூலம் மற்ற விளையாட்டு வீரர்களுடன் குறிப்பிட்ட ஒரு வீடியோ கேமில் மோதுவது தான் ஈ-ஸ்போர்ட். இந்த வகை மோதல்களில் வெற்றி பெறும் வீரர் அல்லது அணிக்கு பெரிய பரிசுத் தொகை கிடைக்கும்.
என்னென்ன விளையாட்டு?
மற்ற வீரர்களுடன் மோதும் மல்டி-பிளேயர் வகை வீடியோ கேம்களில் சிலவற்றை ஈ-ஸ்போர்ட்டாக நடத்தி வருகின்றன, அந்த வீடியோ கேம்களை உருவாக்கிய நிறுவனங்கள். அப்படி 2020ஆம் ஆண்டில் பிரபலமாக உள்ள சில விளையாட்டுக்கள் - போர்ட்நைட், DOTA 2, சிஎஸ் : கோ, பப்ஜி, ஓவர்வாட்ச், லீக் ஆஃப் லெஜண்ட்ஸ், அரீனா ஆஃப் வலோர், கால் ஆஃப் டியூட்டி, ரெயின்போ சிக்ஸ் சீஜ், ஹார்த்ஸ்டோன்.
குறைந்த அங்கீகாரம்
இந்த ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கள் அந்தந்த வீடியோ கேம் நிறுவனங்களால் மட்டுமே தனி விளையாட்டுத் தொடர்களாக பல்வேறு இடங்களில் அவ்வப்போது நடத்தி வந்த நிலையில், 2018இல் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கண்காட்சி முறையில் ஈ-ஸ்போர்ட் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. அதுவே இந்த ஈ-ஸ்போர்ட் விளையாட்டுக்கு இதுவரை கிடைத்த அங்கீகாரம்.
ஈ-ஸ்போர்ட்ஸ் இதுவரை…
உலகில் விளையாட்டுப் போட்டிகள் என்றால் கால்பந்து, கிரிக்கெட், பேஸ்பால், தடகளம், கோல்ஃப் என மைதானங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே என்ற நிலை தான் இதுவரை இருந்தது. ஈ-ஸ்போர்ட்ஸ் என்பது வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமே என்ற நிலை இதுவரை இருந்தது.
கொரோனா வைரஸ் தாக்கம்
ஆனால், கொரோனா வைரஸ் மனிதர்களை தாக்கி உடல்நிலையை சீர் குலைப்பது போலவே, மக்களை அச்சத்தால் வீட்டுக்குள் முடங்க வைத்து பொருளாதரத்தை முடக்கி உள்ளது. அதன் ஒரு பகுதியாக மைதானங்களில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகள் முற்றிலுமாக நின்று போய் உள்ளன. இனி எப்போது கொரோனா வைரஸ் கட்டுபடுத்தப்படும்,விளையாட்டுப் போட்டிகள் எப்போது மீண்டும் நடத்தப்படும்? என்ற விடை தெரியாத கேள்வி உள்ளது.
சிக்கல் இல்லாத ஈ-ஸ்போர்ட்ஸ்
இந்த நிலையில் தான் ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டுத் துறைக்கு நம்பிக்கை அளித்துள்ளது. ஈ-ஸ்போர்ட்ஸ் நடத்த மைதானம் தேவை இல்லை. தொலைக்காட்சி அல்லது மொபைல் போன் ஸ்க்ரீனில் தான் போட்டிகள் நடக்கிறது. இணையதளம் மூலம் போட்டியாளர்கள் தங்கள் வீட்டில் இருந்த படியே, மற்றவர்களுடன் போட்டிகளில் மோதலாம். அதை கோடிக்கணக்கான ரசிகர்கள் தங்கள் கணினி அல்லது மொபைல் போனில் பார்த்துக் கொள்ளலாம்.
வளர்ச்சி அடையும்
கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் சில மாதங்கள் நீடித்தால், வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர் வேறு வழியின்றி வீடியோ கேம் பக்கம் தங்கள் கவனத்தை திருப்புவார்கள். அப்படியே ஈ-ஸ்போர்ட்ஸ் விளையாடுபவர்களின் எண்ணிக்கையும், அதை காணும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கும்.
உலகம் முழுவதும் பரவும்
ஈ-ஸ்போர்ட்ஸ் என்றால் என்ன என்றே தெரியாத பல நூறு கோடி மக்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்வார்கள். இதுவரை 200 கோடிக்கும் குறைவான மக்களுக்கே ஈ-ஸ்போர்ட்ஸ் என்றால் என்ன என்பது தெரியும் என கூறப்படுகிறது. அந்த எண்ணிக்கை வரும் நாட்களில் இரண்டு மடங்காக உயரும்.
பிரபல விளையாட்டுக்கள் மாறலாம்
இதுவரை வரைமுறை இல்லாத கற்பனையில் உருவாக்கப்பட்ட வீடியோ கேம்கள் மட்டுமே ஈ-ஸ்போர்ட் விளையாட்டுக்களாக ஆடப்பட்டு வந்த நிலையில், இனி மைதானத்தில் விதிமுறைகள் வகுத்து நடத்தப்பட்டு வந்த அனைத்து விளையாட்டுக்களும் ஈ-ஸ்போர்ட் ஆக மாற வாய்ப்பு உள்ளது.
துவங்கிய மாற்றம்
ஏற்கனவே, கார் பந்தயங்களை நடத்தி வரும் நாஸ்கார், இங்கிலாந்தின் கால்பந்து அமைப்பு ஆகியவை தங்கள் விளையாட்டுக்களை ஈ-ஸ்போர்ட் முறையில் பிரபல வீரர்களை வைத்தே நடத்தி உள்ளது. இது ஒரு ஆரம்பம் தான். விரைவில் அனைத்து விளையாட்டுக்களும் இதில் இணையும் என எதிர்பார்க்கலாம்.