நகுரா: ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றதன் மூலம், கென்ய நாட்டு தடகள வீராங்கனை பெய்த் கிப்யிகான், தான் பிறந்த கிராமத்திற்கே மின்சார இணைப்பு பெற்றுத் தந்து ரியல் ஹிரோயினாக மாறியிருக்கிறார்.
கென்யாவில் உள்ள நகுரா மாகாணத்தில் நடாபிபிட் என்ற கிராமத்தில் பிறந்தவர் பெய்த் கிப்யிகான். அந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மின்சாரமே இல்லை. மேலும் அடிப்படை வசதிகள் கூட எதுவும் இல்லை.
இந்நிலையில், கிப்யிகான் தீவிர பயிற்சியை மேற்கொண்டு ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றார். 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும் வென்றார். ஆனால் இந்த சாதனைகளை எல்லாம் தொலைக்காட்சியில் பார்க்கக் கூட தனது தந்தைக்கோ, உறவினருக்கோ அந்த கிராமத்திற்கோ வாய்ப்பில்லாமல் போனது.
இதனையடுத்து, தங்கம் வென்ற தனது மகளின் சாதனையைக் கூட டிவியில் பார்க்க முடியவில்லை. இதனால் இந்த கிராமத்திற்கே மின்சார இணைப்பை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கிப்யிகானின் தந்தை கென்ய நாட்டு அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
தங்க மங்கையின் தந்தையின் வேண்டுகோளை ஏற்று கொண்ட கென்ய அதிபர், அந்த கிராமத்திற்கே மின்சாரத்தை வழங்க உடனடியாக உத்தரவிட்டார். அதன்படி, கிப்யிகானின் வீடு மற்றும் கிராமம் முழுவதற்கும் 10 நாட்களில் மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்ததோடு, தனது கிராமத்திற்கும் மின்சாரத்தை கொண்டு வந்த தடகள வீராங்கனை கிப்யிகானை அந்த கிராம மக்களே பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவில் வெற்றி பெற்றவர்கள் இப்படி எல்லாம் யோசிப்பார்களா என்று கூட தெரியவில்லை.