ஈரோடு : ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த விவசாய கூலி குமார் என்பவரின் மகள் செல்வி கீர்த்தனா உலக சிலம்பப் போட்டிக்கு தகுதி பெற்றும், அதற்கான கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.
தமிழர் புகழை, கலாச்சாரத்தை பறைசாற்றும் சிலம்ப விளையாட்டை சமீப காலமாக வளர்ந்து வருகிறது. அழிந்து போகும் நிலையில் இருக்கும் அந்த வீரக் கலையை விளையாட்டாக வாழ வைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதன் படி மலேசியாவில் நடைபெற உள்ள உலக சிலம்பப் போட்டிக்கு தமிழ்ப் பெண்ணான கீர்த்தனா தகுதி பெற்றுள்ளார். அவர் கோவையில் இயங்கி வரும் யுனைட்டட் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜி கல்லூரியில் நான்காம் ஆண்டு பொறியியல் பயின்று வருகிறார்.
இவர் ஏற்கனவே தெற்கு ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் பங்கு பெற்று வெண்கலம் வென்று இருக்கிறார். அதன் அடிப்படையில் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மலேசியாவில் நடைபெறும் உலக சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறார்.
வரும் அக்டோபர் 1 அன்று மலேசியா கிளம்ப உள்ளனர் அங்கே சுமார் 7 நாட்கள் வரை தங்கி இருந்து உலக சிலம்பப் போட்டியில் பங்கேற்க உள்ளனர். பின்னர் அக்டோபர் 7 அன்று மீண்டும் இந்தியா திரும்புவார்கள்.
இதற்கான கட்டணத்தை பங்கேற்கும் வீரர்களே செலுத்த வேண்டும் என அனைத்து இந்திய சிலம்பம் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வீரரும் போட்டியில் பங்கு பெற, போக வர இந்தியா - மலேசியா விமான செலவு, விசா, நுழைவுக் கட்டணம் தங்கும் செலவாக ரூ.55,000 செலுத்த வேண்டும். மேலும், பதிவுக் கட்டணம் ரூ.25,000 செலுத்த வேண்டும்.
விவசாய கூலி குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனா, இந்த தொகையை செலுத்த முடியாமல் தவித்து வருகிறார். உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறார் கீர்த்தனா.
உதவி செய்ய விரும்புபவர்கள் தொடர்புக்கு - 7598545017