காயம் காரணமாக விலகிய போகாட்
கடந்த 2016ல் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், காலிறுதிவரை முன்னேறி திறம்பட விளையாடிவந்த நிலையில், காலிறுதியில் கால்மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக, போட்டியிலிருந்து வெளியேறினார். இதையடுத்து அவரது பதக்கக் கனவு தகர்ந்தது.
53 கிலோ எடைப்பிரிவில் வெற்றி
சமீபத்தில் டெல்லியின் இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வியட்நாமை சேர்ந்த தி லை கியூவை வென்று வினேஷ் போகாட் வெண்கலம் வென்றுள்ளார். இதையடுத்து அவர் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
கோப்பை தன்னம்பிக்கை தருகிறது
நாட்டிற்காக போட்டியிட்டு கோப்பையை வெல்வது மிகப்பெரிய விஷயம் என்று தெரிவித்துள்ள போகாட், இந்த போட்டி மூலம் தன்னுடைய நிறைகுறைகளை கண்டறிய முடிந்ததாகவும், அதை நிவர்த்தி செய்து ஒலிம்பிக் போட்டிக்காக தான் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் போட்டியில் பங்கேற்று பதக்கங்களை வெல்வது தன்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ப்ரெஷ் மனநிலையில் எதிர்கொள்வேன்
டோக்கியோவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தான் தேர்வாகியுள்ள நிலையில், தான் புதியதொரு மனநிலையில் அந்த தொடரை எதிர்கொள்ளவுள்ளதாக போகாட் தெரிவித்தார். இதற்கென தன்னுடைய பயிற்சியாளர்கள், பிட்னஸ் நிபுணர்கள், தன்னுடைய பயிற்சியை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
சவால் நிறைந்த நாட்கள்
ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக உள்ள ஒவ்வொரு நாளும் தனக்கு மிகவும் முக்கியமானதாகவும் சவால் நிறைந்ததாகவும் உள்ளதாக போகாட் தெரிவித்தார். தன்னுடன் மோதவுள்ள எதிரணி வீரர்களின் திறமைகள் குறித்தும், அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் தன்னுடைய பயிற்சியாளருடன் இணைந்து தான் திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அதிக வீரர்கள் சென்றால் உற்சாகம்
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தற்போது தன்னுடைய சேர்த்து 4 பேர் தேர்வாகியுள்ள நிலையில், அனைவரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், இன்னும் அதிகமான வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தேர்வாவார்கள் என்றும் கூறிய போகாட், எவ்வளவு அதிகமான வீரர்கள் ஒலிம்பிக்கிற்காக செல்கிறார்களோ அந்த அளவிற்கு உற்சாகம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
விட்டுக்கொடுக்க மாட்டேன்
கடந்த 2016ல் ரியோவில் நடைபெற்ற போட்டியில் தன்னால் வெற்றியை கைக்கொள்ள முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்த போகாட், தற்போது தனக்கு இரண்டாவது சான்ஸ் கிடைத்துள்ளதாகவும், அதை தான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றும் உறுதிபட தெரிவித்துள்ளார். தன்னுடைய முழுத் திறமையை வெளிக்காட்டி நாட்டிற்காக பதக்கத்துடன் தான் திரும்பி வருவேன் என்றும் அவர் மேலும் கூறினார்.