விதிமீறல்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையே இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாட்டை மீறி இருந்தார். அதனால் அவர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார்.
நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன் மைதானம் செல்லும் வழியில் தன் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அதுதான் அவர் செய்த விதிமீறல். அதனால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருந்ததால் பெரும் சர்ச்சை ஆனது. தற்போது அவர் ஐந்து நாள் தனிமையில் இருந்து விடுபட்டு அணியுடன் இணைந்துள்ளார்.
சல்மான் பட்
இருந்தாலும் ஆர்ச்சர் விவகாரம் விவாதப் பொருளாகவே உள்ளது. அது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் ஒரு பேட்டியில் விமர்சனம் செய்து இருந்தார். விதிகள், விதிகள்தான்.. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என கூறி இருந்தார்.
மேட்ச் பிக்ஸிங்
2010ஆம் ஆண்டு சல்மான் பட் மேட்ச் பிக்ஸிங் விவகாரத்தில் சிக்கி தடை விதிக்கப்பட்டு இருந்தது. அந்த தடையால் அதன் பின் அவரால் மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு வர முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில், அவர் ஆர்ச்சர் விதிமீறல் பற்றி பேசி இருப்பதால் தான் ரசிகர்கள் அவரை விளாசி இருக்கிறார்கள்.
எது சிறந்த ஜோக் தெரியுமா?
ஒரு பாகிஸ்தான் ரசிகர், எது சிறந்த ஜோக் தெரியுமா? சல்மான் பட் ஒரு தன் யூட்யூப் வீடியோவில் விதிகள் என்றால் விதிகள் தான். ஜோப்ரா ஆர்ச்சர் அதை மீறி இருக்கக் கூடாது என கூறி இருப்பது தான் என கிண்டலாக கூறி உள்ளார்.
ஆக்ஸ்போர்டு
இந்த வீடியோவை பார்த்த உடன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை இயக்குனராக சல்மான் பட்டை நியமித்து விட்டார்கள் என மற்றொரு பாகிஸ்தான் ரசிகர் கிண்டலாக கூறி உள்ளார். சல்மான் பட் விதிகள் மற்றும் கொள்கைகளுக்கான மனிதர் என வேறு ஒருவர் கூறி உள்ளார்.