கோல்ட் கோஸ்ட்: காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற முதல் திருநங்கையான நியூசிலாந்தின் லாரல் ஹப்பார்டு, காயம் காரணமாக, பளுதூக்கும் போட்டியில் இருந்து விலகினார்.
21வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடக்கிறது. வரும் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா உள்பட 71 நாடுகளைச் சேர்ந்த 6,700 வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் மகளிர் 91 கிலோவுக்கு மேற்பட்டோர் பளுதூக்கும் பிரிவில் நியூசிலாந்தின் லாரல் ஹப்பார்டு பங்கேற்றுள்ளார். 30 வயது வரை ஆணாக இருந்து பெண்ணாக மாறிய, தற்போது 40 வயதாகும் ஹப்பார்டு, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை.
அவர் போட்டியில் பங்கேற்பதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 30 வயது வரை ஆணாக இருந்ததால், ஆணுக்கான வலிமை அவருக்கு
இருப்பதால், பெண்கள் பிரிவில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று பல நாடுகள் கூறின. இன்று நடந்த 91 கிலோவுக்கு மேற்பட்டோர் மகளிர் பளுதூக்குதல் போட்டியில் அவர் ஸ்னாட்ச் பிரிவில் முதலில் 120 கிலோவை தூக்கினார். இரண்டாவது வாய்ப்பில் 127 கிலோ தூக்க முயன்று தோல்வியடைந்தார். மூன்றாவது வாய்ப்பில் 132 கிலோ தூக்க முயன்று தோல்வியடைந்தார்.
கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் தூக்க முயன்றபோது, தோள்பட்டையில் வலி ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார். ஸ்னாட்ச் பிரிவில் மற்றவர்களைவிட அதிக எடையை தூக்கிய ஹப்பார்டு, பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருந்தது. இருந்தும் காயம் காரணமாக வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டபோது, கண்ணீர் விட்டது, அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.