மில்கா சிங்
இந்திய தடகளத் துறையின் ஜாம்பவானாக விளங்கும் பஞ்சாபை சேர்ந்த முன்னாள் ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் பறக்கும் சீக்கியர் என அழைக்கப்படுகிறார். மில்கா சிங் 5 முறை ஆசிய போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 1960-ல் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் மில்கா சிங் 45.73 வினாடிகளில் இலக்கை கடந்து 4-வது வந்தார். தேசிய அளவில் சுமார் 40 ஆண்டுகளாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது. மில்கா சிங்குக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
இளைஞர்கள் எழுச்சி
91 வயதான மில்கா சிங்கின் மரணம் நாடு முழுக்க பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1960-ம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவறவிட்டார். அப்போட்டியில் அவர் நான்காம் இடம் பிடித்தார். அவர் பதக்கத்தை தவறவிட்டாலும், இந்தியா முழுக்க ஹீரோவானார். இவரை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு பல இளைஞர்கள் எழுந்து வரத் தொடங்கினர்.
நின்ற இறுதி மூச்சு
சமீபத்தில், இவருக்கும் இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட, டெல்லி மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை அளித்தும் இவர்களது உடலில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஜூன் 13ம் தேதி மனைவி உயிரிழக்க, மில்கா சிங்கின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்பினர். இதையடுத்து அவர்களுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டு, மில்கா சிங் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று இரவு அவர் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்.
தலைவர்கள் இரங்கல்
இந்தியாவின் பறக்கும் மனிதன் அன்று அன்போடு அழைக்கப்பட்ட, பல இளைஞர்களை தட்டி எழுப்பிய மில்கா சிங்கின் மறைவு தேசத்தின் பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும், மக்களும் மில்கா சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.