சென்னை: ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பிவி சிந்து, சாக்ஷி மாலிக் திபா கர்மாகர், ஜித்து ராய் ஆகிய நால்வருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார். மேலும், 15 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, வெண்கலம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் இறுதிச்சுற்றுவரை சென்ற தீபாகர்மாகர் துப்பாக்கிச் சுடுதல் வீரர் ஜித்து ராய் ஆகியோர் விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்தியரான தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை இழந்தார். துப்பாக்கிச் சுடுதல் வீரரான ஜித்து ராய், ஒலிம்பிக்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார்.
தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படும் இன்று ஆகஸ்ட் 29ம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்கண்ட வீரர்களுக்கான விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
கேல் ரத்னா விருதுடன் பட்டயம் மற்றும் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. இதுதவிர அர்ஜூனா விருது, துரோணாசார்யா விருது, தியான் சந்த் விருது ஆகியவற்றுக்குத் தேர்வானவர்களுக்கும் இன்று விருதுகள் வழங்கப்பட்டன.
Delhi: Gymnast Dipa Karmakar conferred with the Rajiv Gandhi Khel Ratna Award by President Mukherjee.https://t.co/kWkS7IuiWm
— ANI (@ANI_news) August 29, 2016
கேல் ரத்னா விருது
பி.வி.சிந்து (பாட்மிண்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜிது ராய் (துப்பாக்கிச் சுடுதல்).
துரோணாசார்யா விருது
நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர் மால் தயாள் (குத்துச்சண்டை), ராஜ்குமார் சர்மா (கிரிக்கெட்), விஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்), பிரதீப் குமார் (நீச்சல்), மகாவீர் சிங் (மல்யுத்தம்).
அர்ஜூனா விருது
வில் வித்தையில் ரஜத் சவுகான், அத்லெட் லலிதா பாபர், பில்லியர்ட்ஸ் அண்டு ஸ்னூக்கர் சவுரவ் கோதாரி, குத்துச் சண்டை சிவா தாபா, கால்பந்து வீரர் சுப்ரதா பால், ஹாக்கி வீரர் வி.ஆர். ரகுநாதன் மற்றும் ராணி, துப்பாக்கி சுடும் வீரர் குன்பிரீத் சிங், அபுர்வி சாண்டேலா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
மல்யுத்த போட்டியின்போது காயமடைந்த வீரர் வினேஷ் போகட்டுக்கும் விருது வழங்கப்பட்டது. சில்வனஸ் டங் டங், ராஜேந்திர பிரஹலாத் ஷேல்கேவுக்கு தயாந்த் சந்த் விருது வழங்கப்பட்டன.