டெல்லி: மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில் இன்று தொடங்க உள்ளது. வரும் 18ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்க 19 வீரர் வீராங்கனையில் பிரேசில் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
ரியோ ஒலிம்பிக் 2016 அண்மையில் முடிந்த நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் இன்று பிரேசிலில் தொடங்க உள்ளன. இதில் 23 விளையாட்டுகளில் 528 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் 162 நாடுகளில் இருந்து அதிகபட்சமாக 4300 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்தியா சார்பில் 10 விளையாட்டுகளில் பங்கேற்க 2004ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்கப் பதக்கம் வென்ற தேவேந்திரா ஹஜ்ஹாரியா உட்பட 19 வீரர் வீராங்கனையில் பிரேசில் சென்றுள்ளனர்.
இந்திய அணி சார்பில் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கவேலு, வருண் சிங் பாத்தி, சரத் குமார், ராம்பால் ஷாகர், ஈட்டி எறிதலில் சுந்தர் சிங் குர்ஜார், தேவேந்திரா ஹஜ்ஹாரியா, ரிங்கு, நரேந்தர் ரன்பிர், சந்தீப், கிளப் த்ரோவில் அமித் குமார் சரோஹா, தரம்பிர், துப்பாக்கி சுடுதலில், நரேஷ் குமார் சர்மா, நீச்சலில், சுயாஷ் நாராயண் யாதவ், பளு தூக்குதலில் பாஷா பர்மான், 1500 மீட்டர் ஓட்டத்தில், அங்குர் தமா, குண்டு எறிதலில் வீரேந்தர் தன்கா, பெண்களில் வில்வித்தையில் பூஜா, குண்டு எறிதலில் தீபா மாலிக், வட்டெறிதலில் கரம் ஜோதி தலால் ஆகியோர் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர்.
பாரா ஒலிம்பிக்கின் கண்கவர் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 2 மணிக்கு தொடங்க உள்ளது.
இதற்கிடையே, பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்பவர்களுக்கு 75 லட்சம் ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வெல்பவர்களுக்கு 50 லட்சம் ரூபாயும், வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு 30 லட்சம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.